‘காற்றின்மொழி’ பட விழாவில் சூர்யா-ஜோதிகா

‘காற்றின் மொழி’ பட தொடக்க விழா பூஜையில் கலந்துகொண்ட நடிகர்கள் சிவகுமார், சூர்யா, நடிகை ஜோதிகா.

Update: 2018-06-04 23:24 GMT
ஜோதிகா திருமணத்துக்கு பிறகு கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேடிப்பிடித்து நடிக்கிறார். மலையாளத்தில் மஞ்சு வாரியர் நடித்த ஹவ் ஓல்டு ஆர் யூ படம் ஜோதிகா நடிப்பில் 36 வயதினிலே என்ற பெயரில் தயாராகி வெளிவந்து வரவேற்பை பெற்றது. அதன்பிறகு சூர்யா தயாரித்த மகளிர் மட்டும் படத்தில் நடித்தார்.

பாலா இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான நாச்சியார் படத்தில் அதிரடி போலீஸ் அதிகாரியாக வந்தார். இந்த படத்தில் கைதியை பார்த்து அவர் மோசமாக பேசிய வசனம் சர்ச்சையை கிளப்பியது. அதையும் மீறி ஜோதிகாவின் நடிப்பு பேசும்படி இருந்தது. தற்போது மணிரத்னம் இயக்கத்தில் செக்க சிவந்த வானம், ராதா மோகன் டைரக்டு செய்யும் காற்றின் மொழி ஆகிய இரண்டு படங்கள் அவர் கைவசம் உள்ளன.

காற்றின் மொழி இந்தியில் வித்யாபாலன் நடித்து வெற்றி பெற்ற ‘தும்ஹாரி சூலு’ படத்தின் தமிழ் ரீமேக் ஆக தயாராகிறது. வித்யாபாலன் கதாபாத்திரத்தில் ஜோதிகா நடிக்கிறார். சாதாரண பெண், ரேடியோ ஜாக்கியாக உயர்ந்து தனது வாழ்க்கையில் ஏற்பட்ட சவாலான பிரச்சினைகளை எப்படி சமாளிக்கிறாள்? என்பது கதை.

இதில் விதார்த், லட்சுமி மஞ்சு, மனோபாலா, மோகன் ராமன் ஆகியோரும் நடிக்கின்றனர். 50 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தி அக்டோபர் மாதம் படத்தை திரைக்கு கொண்டு வருகிறார்கள். காற்றின் மொழி படத்தின் தொடக்க விழா பூஜை சென்னையில் நேற்று நடந்தது. இதில் நடிகர்கள் சிவகுமார், சூர்யா ஆகியோர் கலந்துகொண்டனர்.

ராதா மோகன்-ஜோதிகா கூட்டணியில் வந்த மொழி படம் வசூல் சாதனை நிகழ்த்தியது. இருவரும் மீண்டும் இந்த படத்தில் டைரக்டர்-கதாநாயகியாக இணைந்துள்ளனர். தனஞ்செயன் தயாரிக்கிறார்.

மேலும் செய்திகள்