“குழந்தைக்கு அம்மாவாக இருப்பது பெரிய விஷயம்” -நடிகை சினேகா

குழந்தைக்கு அம்மா என்பது பெரிய விஷயம் என்று நடிகை சினேகா கூறியுள்ளார்.

Update: 2018-06-08 23:23 GMT
கே.ஆர்.விஜயாவுக்கு பிறகு சிரிப்பழகியாக பேசப்பட்ட சினேகா, நடிகர் பிரசன்னாவை மணந்து இல்லற வாழ்க்கைக்கு திரும்பிய பிறகும் சினிமாவில் நடிக்கிறார். கடந்த வருடம் வேலைக்காரன் படம் வந்தது. இப்போது தெலுங்கு, கன்னடத்தில் தலா ஒரு படம் கைவசம் வைத்துள்ளார். சினேகாவுக்கு 3 வயது ஆண்குழந்தை உள்ளது. குடும்ப வாழ்க்கை பற்றி சினேகா சொல்கிறார்:-

“எனக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆனதுமே குழந்தை எப்போது என்று கேட்க ஆரம்பித்தனர். அதன்பிறகுதான் கர்ப்பமானேன். குழந்தையை பெற்று எடுப்பது சாதாரண வேலை இல்லை. பெரிய பொறுப்பு. சாப்பிடுவது, தூங்குவது, நடப்பது எல்லாவற்றிலும் கணக்கு இருக்கும். கர்ப்பமாக இருந்த காலம் பெரிய அனுபவமாக இருந்தது.

சாதாரண பிரசவத்துக்கு ஆசைப்பட்டேன். ஆனால் ஆபரேஷனை தவிர்க்க முடியவில்லை. முதலில் பயம் இருந்தது. இப்போது கர்ப்பமான பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்று கற்று கொடுக்கும் அளவுக்கு எனக்கு அனுபவம் வந்துள்ளது. குழந்தைக்கு அம்மா என்பது பெரிய விஷயம். எனது மகன் விஹான் விளையாடும்போது பார்வை முழுவதும் அவன் மீதுதான் இருக்கும்.

ஆனால் பிரசன்னா சாதாரணமாக இருப்பார். விழுந்து அவனாகவே எழுந்து நடக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்பார். மகன்தான் எனது உலகம். அவனுடன் வாழ்க்கையை கழிப்பதில் மகிழ்கிறேன். அவனை வீட்டில் மற்றவர்களிடம் விட்டு செல்வது இல்லை. படப்பிடிப்புக்கும் அழைத்தே செல்கிறேன்.

இப்போது சினிமா ரொம்ப மாறி இருக்கிறது. நடிகைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்கள் வருகின்றன. திருமணமான நடிகைகளை ஒதுக்காமல் அவர்களுக்கும் வாய்ப்புகள் தருகிறார்கள்.”

இவ்வாறு சினேகா கூறினார். 

மேலும் செய்திகள்