‘கும்கி-2’ படத்துக்காக “குட்டி யானையை தேடி நாடு நாடாக அலைந்தோம்”-பிரபுசாலமன்

பிரபுசாலமன் டைரக்‌ஷனில், ‘கும்கி-2’ படம் தொடங்கியது. “இது, முதல் பாக கதையின் தொடர்ச்சி அல்ல.

Update: 2018-06-12 09:44 GMT
விக்ரம் பிரபு-லட்சுமி மேனன் கதாநாயகன்-கதாநாயகியாக அறிமுகமான ‘கும்கி‘ படத்தை லிங்குசாமி தயாரித்தார். பிரபுசாலமன் டைரக்டு செய்தார். கடந்த 2012-ம் ஆண்டு படம் திரைக்கு வந்தது. 6 வருடங்களுக்குப்பின், பிரபுசாலமன் டைரக்‌ஷனில், ‘கும்கி-2’ படம் தொடங்கியது. “இது, முதல் பாக கதையின் தொடர்ச்சி அல்ல. ‘கும்கி’ படத்துக்கும், ‘கும்கி-2’ படத்துக்கும் கதை அளவில் எந்த தொடர்பும் இல்லை. யானை சம்பந்தப்பட்ட கதை என்பதால், இதற்கும் ‘கும்கி’ என்ற தலைப்பை தொட வேண்டி இருக்கிறது” என்கிறார், டைரக்டர் பிரபுசாலமன். அவர் மேலும் கூறுகிறார்:-

“ஒரு குட்டி யானைக்கும், ஒரு சிறுவனுக்கும் இடையே உருவான நட்பு, அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகிற வரை நடக்கும் வாழ்வியல்தான் ‘கும்கி-2.’ குட்டி யானைக்காக இந்தியா, இலங்கை, பர்மா, தாய்லாந்து உள்பட ஏராளமான நாடுகளில் அலைந்து திரிந்தோம். யானை கிடைத்தால், அனுமதி கிடைக்கவில்லை. அனுமதி கிடைத்தால், யானை ஒத்துழைக்கவில்லை. கடைசியாக தாய்லாந்தில் சரியாக அமைந்தது.

அங்கேயே படப்பிடிப்பை தொடங்கி, இரண்டு கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டோம். ஒரு யதார்த்தமான படமாக, ‘கும்கி-2’ இருக்கும். வழக்கமாக என் படத்தின் பாடல்களுக்கு ரசிகர்களிடையே ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். இந்த படத்திலும், நிவாஸ் கே.பிரசன்னா இசையில், பாடல்கள் சிறப்பாக இருக்கும்.

இந்த படத்தில், கதாநாயகனாக மதியழகன் அறிமுகம் ஆகிறார். கதாநாயகி இன்னும் முடிவாகவில்லை. வில்லனாக ஹரிஷ் பெராடி அறிமுகம் ஆகிறார். சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். ஜெயந்திலால் காடா தயாரிக்கிறார். மூன்றாவது கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.” 

மேலும் செய்திகள்