விபத்தில் சிக்கி ஒரு மணிநேரம் உயிருக்கு போராடிய நடிகை புகைப்படம் எடுத்த பொதுமக்கள்
கேரளாவில் நடிகை கார் விபத்தில் சிக்கி ஒரு மணிநேரம் உயிருக்கு போராடியபோது யாரும் உதவி செய்யாமல் செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளனர். #MeghaMathew
எர்ணாகுளம்
மலையாள படங்களில் நடித்து வருபவர் மேகா மேத்யூ. மம்மூட்டியின் மாஸ்டர்பீஸ் படத்தில் நடித்த அவர் தற்போது மோகன்லாலின் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் மேகா தனது சகோதரரின் நிச்சயதார்த்தத்தில் கலந்து கொள்ள கொச்சியில் இருந்து எர்ணாகுளம் சென்றார்.
மேகா கொச்சியில் உள்ள தனது வீட்டில் இருந்து கார் மூலம் எர்ணாகுளம் கிளம்பினார். காரை மேகா தான் ஓட்டிச் சென்றார். அவர் எர்ணாகுளம் அருகே உள்ள முளன்துருத்தி பகுதியில் சென்றபோது எதிரே வந்த கார் மேகாவின் கார் மீது மோதியது.
இந்த விபத்தில் மேகாவின் கார் தலைகுப்புற கவிழ்ந்துவிட்டது. ஆனால் மோதிய காரோ நிற்காமல் சென்றுவிட்டது. விபத்தில் மேகா மயங்கிவிட்டார். அவர் இறந்துவிட்டார் என்று நினைத்து யாரும் உதவாமல் தங்களின் செல்போன்களில் புகைப்படம், வீடியோ எடுத்துள்ளனர்.
மேகா ஒரு மணிநேரமாக காருக்குள் உயிருக்கு போராடியுள்ளார். ஒரு மணிநேரம் கழித்து அந்த வழியாக வந்த புகைப்படக் கலைஞர் ஒருவர் தான் மேகாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
மேகாவுக்கு லேசான காயங்கள் தான் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மக்கள் மேகாவுக்கு உதவாமல் புகைப்படம் எடுத்தது பலரையும் வியக்க வைத்துள்ளது.