சேர்ந்து வாழ்ந்த காதலியை தாக்கிய வழக்கு; இந்தி நடிகர் அர்மான் கோலி கைது
இந்தி திரைப்பட நடிகர் அர்மான் கோலி காதலியை தாக்கிய வழக்கில் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.
மும்பை,
பிரபல இந்தி திரைப்பட நடிகரான அர்மான் கோலி பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று வருகிறார். நடிகர் அர்மான் கோலியும், மாடலுமான நீரு ரந்தாவா இருவரும் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில் இருவருக்கும் இடையே பணப்பிரச்சினை தொடர்பாக தகராறு நடந்து உள்ளது.
கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை இருவருக்கும் இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டு உள்ளது. இதில் அர்மான் ரந்தாவை தலைமுடியை பிடித்து அடித்து தாக்கி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் கோகிலபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று பின் வீடு திரும்பினார்.
இதனை தொடர்ந்து ரந்தாவா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அர்மான் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
கடந்த 2013ம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் நடிகை தனிஷா முகர்ஜியுடன் ஒன்றாக பல இடங்களில் சுற்றி திரிந்துள்ளார். எனினும் அவர்கள் இருவரும் பின்னர் தங்களுக்குள் ஏற்பட்ட வேற்றுமையால் பிரிந்து விட்டனர்.
இந்நிலையில், இந்தி திரைப்பட நடிகர் அர்மான் கோலியை மும்பை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.