பாலியல் புகார் கூறிய ஸ்ரீரெட்டிக்கு நடிகர் நானி நோட்டீஸ்

தன்னைப் பற்றி பாலியல் புகார் கூறிய ஸ்ரீரெட்டிக்கு நடிகர் நானி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

Update: 2018-06-12 22:15 GMT
நடிகர்கள், டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள் பட வாய்ப்பு தர நடிகைகளை படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்று சொல்லி இந்திய பட உலகையே அதிர வைத்த தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி இப்போது நடிகர் நானியை பாலியல் சர்ச்சைக்குள் இழுத்து பரபரப்பான புகார்கள் கூறி வருகிறார். ‘நான் ஈ’ படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நானி.

வெப்பம், ஆஹா கல்யாணம் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கிலும் முன்னணி நடிகராக இருக்கிறார். நானி ஒரு நடிகையின் வாழ்க்கையை கெடுத்து நரகத்தில் தள்ளிவிட்டார். நிஜ வாழ்க்கையிலும் அவர் நடிக்க கூடியவர் என்று ஏற்கனவே ஸ்ரீரெட்டி சாடி இருந்தார். இந்த நிலையில் தெலுங்கில் நானி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் டி.வி நிகழ்ச்சியில் ஸ்ரீரெட்டியை கலந்து கொள்ள விடாமல் தடுத்ததாக தகவல் வெளியானது.

இதனால் ஆத்திரமான ஸ்ரீரெட்டி மீண்டும் அவர் மீது செக்ஸ் புகார் கூறினார். “நானி எனக்கு பாலியல் தொல்லை கொடுத்து தவறாக நடந்து கொண்டார். என்னுடன் படுக்கவில்லை என்று சத்தியம் செய்ய நானி தயாரா? எனக்கு வரும் வாய்ப்புகளை தடுக்கிறார். எனது பாவம் அவரை சும்மா விடாது.” என்று பரபரப்பாக ஸ்ரீரெட்டி குற்றம் சாட்டி உள்ளார்.

இதற்காக ஸ்ரீரெட்டிக்கு நானி வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

“என் மீது ஸ்ரீரெட்டி அவதூறுகள் பரப்பி வருகிறார். அதில் உண்மை இல்லை. இத்தகையை செயல்கள் வருத்தம் அளிக்கின்றன. எனது நன்மதிப்பை கெடுக்கும் வகையில் பொய்யான தகவல் பரப்புவதை அவர் நிறுத்த வேண்டும். இதற்காக வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறேன். ஒரு வாரத்தில் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் மான நஷ்ட வழக்கு தொடரப்படும்.” இவ்வாறு நானி கூறியுள்ளார்.

ஸ்ரீரெட்டி-நானி மோதல் தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்