ஸ்டிரைக்கால் தாமதமான படப்பிடிப்பு: விஜய், அஜித் படங்கள் தீபாவளிக்கு வெளியாகுமா?

ஸ்டிரைக்கினால் படப்பிடிப்புகள் தாமதமானதால் விஜய், அஜித் படங்கள் தீபாவளிக்கு வெளியாகுமா? என தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2018-06-13 23:30 GMT

விஜய், அஜித்குமார் நடிக்கும் படங்களின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இரண்டு படங்களையும் தீபாவளிக்கு கொண்டு வரும் முடிவோடு படக்குழுவினர் ஓய்வில்லாமல் வேலை செய்து வருகிறார்கள். இவற்றின் படப்பிடிப்புகளை பாதிக்கு மேல் முடித்துவிட்டதாக கூறப்படுகிறது.

திரையுலகினர் மற்றும் தியேட்டர் அதிபர்கள் வேலை நிறுத்தம் காரணமாக இந்த இரு படங்களின் படப்பிடிப்புகளில் தொய்வு ஏற்பட்டது. ஸ்டிரைக்கால் அஜித்குமார் படப்பிடிப்பை தாமதமாகவே தொடங்கினர். எனவே இரண்டு படங்களும் தீபாவளிக்கு வருமா? அல்லது தள்ளிப்போகுமா? என்று சந்தேகம் நிலவியது.

ஆனால் இரு படங்களும் தீபாவளிக்கு வருவது உறுதி என்று படக்குழு வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். விஜய்க்கு இது 62-வது படம். கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். இவருக்கும் விஜய்க்குமான கூட்டணி துப்பாக்கி, கத்தி படங்களில் ராசியாக அமைந்தன. அதுபோல் இந்த படத்துக்கும் எதிர்பார்ப்பு உள்ளது.

அரசியல் படமாக தயாராகிறது. ராதாரவியும், பழ கருப்பையாவும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்கள். இந்த படத்தின் தலைப்பையும், முதல் தோற்றத்தையும் விஜய் பிறந்த நாளான வருகிற 22-ந் தேதி வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.

அஜித்குமாருக்கு இது 59-வது படம். விசுவாசம் என்று பெயரிட்டுள்ளனர். கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். சிவா டைரக்டு செய்கிறார். அஜித்குமார் - சிவா கூட்டணியில் வீரம், வேதாளம், விவேகம் படங்கள் வந்து வரவேற்பை பெற்றன. நான்காவது படத்திலும் இருவரும் இணைந்துள்ளனர்.

இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கியது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்துகின்றனர். மும்பைக்கும் செல்கிறார்கள். பழிவாங்கும் கதையம்சத்தில் இந்த படம் தயாராவதாக கூறப்படுகிறது. அஜித்குமார், அண்ணன்-தம்பியாக இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் பேச்சு உள்ளது.

மேலும் செய்திகள்