மனஅழுத்தம் உள்ள துறை சினிமா யோகா செய்தால் தப்பிக்கலாம் – நடிகை தமன்னா

தமன்னா 2006–ல் சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து கதாநாயகியாக நடிக்கிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் வந்து திறமையான நடிகை என்றும் பெயர் எடுத்து இருக்கிறார்.

Update: 2018-06-30 22:30 GMT
சினிமாவுக்கு வந்தபோது எப்படி இருந்தாரோ அதே தோற்றத்திலேயே இப்போதும் இருக்கிறார். அவரை ‘மில்க் பியூட்டி’ என்று அழைக்கின்றனர். அழகு ரகசியம் குறித்து தமன்னாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:–

‘‘அழகு, அமைதி, மன அழுத்தம் இல்லாமல் இருப்பது ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் முக்கியம். அதற்கு நான் நம்புவது யோகா. எனது ஒவ்வொரு நாள் வாழ்க்கையும் யோகாவிலேயே கழிகிறது. வெதுவெதுப்பான நீரில் பாதாமை ஊற வைத்து சாப்பிட்டு விட்டு தினசரி பணிகளை தொடங்குவேன்.

காலையில் 1 மணிநேரத்தை உடற்பயிற்சிக்கு ஒதுக்குவேன். அதில் அரைமணி நேரம் சாதாரண உடற்பயிற்சிகள் செய்வேன். கடைசி அரைமணி நேரத்தில் யோகா, தியானம் செய்வேன். எனது ஜிம்மிலேயே இந்த பயிற்சிகளில் ஈடுபடுகிறேன். என்னிடம் யாராவது யோகா பற்றி சொன்னால் அவர்களிடம் மணிக்கணக்கில் பேசுவேன்.  யோகாவால் உடலில் இருக்கும் வி‌ஷ பொருட்கள் வெளியேறும். சருமம் அழகாகும். மனநெருக்கடி, மன உளைச்சல் விரட்டப்படும். மனதில் எதிர்மறை எண்ணங்கள் தோன்றாது. சினிமா என்பது நெருக்கடி, சவால்கள் நிறைந்த தொழில். சரியான தூக்கம் இருக்காது. நேரத்துக்கு சாப்பிட முடியாது. உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் அழுத்தம் இருக்கும்.

இதில் இருந்து விடுபட ஒரே மருந்து யோகாதான். உணவு வி‌ஷயத்திலும் ஜாக்கிரதையாக இருக்கிறேன். உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள தயிர் சாப்பிடுகிறேன். தண்ணீர், பழசாறுகள், இளநீரும் முக்கியம். நொறுக்குத்தீனிகளை தொடுவது இல்லை. சர்க்கரையை விரோதியாக கருதி அதில் இருந்து தள்ளியே இருப்பேன்.’’

இவ்வாறு தமன்னா கூறினார்.

மேலும் செய்திகள்