ரஜினிகாந்துக்கு வில்லனாக விஜய் சேதுபதி

ரஜினிகாந்த் இப்போது கார்த்திக் சுப்புராஜ் டைரக்‌ஷனில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார். படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. படப்பிடிப்பு இமயமலை பகுதியில் நடைபெற்று வருகிறது.

Update: 2018-06-30 23:15 GMT
ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில், விஜய் சேதுபதி வில்லனாக நடித்து வருகிறார். படப்பிடிப்பு தினமும் காலை 7 மணிக்கே தொடங்கி விடுகிறது. மாலை 6 மணி வரை படப்பிடிப்பு நடைபெறுகிறது. படப்பிடிப்புக்கு வரும் ரஜினிகாந்தை பார்க்க தினமும் நூற்றுக்கணக்கில் ரசிகர்கள் வந்து விடுகிறார்கள். அவர்கள் யாரும் படப்பிடிப்பு நடைபெறும் பகுதிக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. தூரத்திலேயே தடுத்து நிறுத்தப்படுகிறார்கள்.

ரசிகர்களை பக்கத்தில் அனுமதித்தால், செல்போன்களில் படம் எடுத்து ரஜினிகாந்தின் புதிய தோற்றத்தையும், படம் பற்றிய தகவல்களையும் வெளியே பரப்பி விடுவார்கள் என்று படக்குழுவினர் பயப்படுகிறார்களாம். படப்பிடிப்பு தளத்தில் ரஜினிகாந்தை பார்க்க முடியாத ரசிகர்கள், நேராக அவர் தங்கியிருக்கும் விடுதிக்கு போய் விடுகிறார்கள். தங்கும் விடுதி முன்பும் தினமும் கூட்டம் கூடிவிடுகிறது.

நேற்று மாலை டார்ஜிலிங் பகுதியில் நடந்த படப்பிடிப்பு முடிந்ததும், ரஜினிகாந்த் அந்த பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்துக்கு சென்றார். அங்கேயும் ரசிகர்கள் திரண்டார்கள். அவர்களை பார்த்து கையசைத்த ரஜினிகாந்த், காரில் ஏறி தங்கும் விடுதிக்கு புறப்பட்டு சென்றார். இன்னும் 40 நாட்கள் இமயமலையில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

மேலும் செய்திகள்