“ஜெயில் வாழ்க்கை என்னை திருத்தியது” -நடிகர் சஞ்சய் தத்

சிறை வாழ்க்கை என்னை திருத்தியது என்று நடிகர் சஞ்சய் தத் கூற்ப்யுள்ளார்.

Update: 2018-07-03 00:00 GMT
பிரபல நடிகர் சஞ்சய்தத் 1993-ல் மும்பை குண்டு வெடிப்பில் 250 பேர் பலியான வழக்கில் சிக்கினார். கோர்ட்டு அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. நன்னடத்தை காரணமாக 8 மாதங்களுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்டார். சஞ்சய்தத் பிறந்தது முதல் பணத்தில் மிதந்து சுகபோக வாழ்க்கை வாழ்ந்தவர்.

இவரது தந்தை சுனில்தத்தும் தாயார் நர்கீசும் இந்தி திரையுலகில் பிரபல நட்சத்திரங்களாக இருந்தவர்கள். நர்கீஸ் 1981-ல் புற்றுநோயால் பாதித்து இறந்ததும் துக்கத்தில் போதைக்கு அடிமையானார். அதன்பிறகுதான் மும்பை குண்டு வெடிப்பு தீவிரவாதிகளுடன் தொடர்பு, வீட்டில் சட்டவிரோதமாக ஏ.கே.56 துப்பாக்கிகள் வைத்திருந்தது போன்ற வழக்குகள் அவர் மீது பாய்ந்தன.

இதனால் சஞ்சய்தத் நிலைகுலைந்து போனார். கோர்ட்டில் தண்டனை விதிக்கப்பட்டபோது கண்களை மூடிக்கொண்டு அழுதார். சிறைவாழ்க்கை குறித்து மனம்திறந்து அவர் பேசியதாவது:-

“சிறை வாழ்க்கை என்னை திருத்தியது. எனக்குள் இருந்த அகங்காரத்தையும் நீக்கியது. நல்ல மனிதனாக என்னை உருமாற்றியது. தனிப்பட்ட முறையில் நிறைய விஷயங்களை சிறையில் கற்றுக்கொண்டேன். குடும்பம், நண்பர்கள், உறவினர்கள் அனைவரையும் பிரிந்து சிறையில் இருப்பது துயரமானது.

சிறைக்குள் உடம்பை எப்படி கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வது என்று கற்றுக்கொண்டேன். மண்பானையில் தண்ணீர் குடித்தேன். குப்பைகளை பொறுக்கி குப்பை தொட்டியில் போட்டேன். சிறையிலும் எனக்கு நண்பர்கள் கிடைத்தனர். வேதனையான நேரங்களில் அவர்கள் எனக்கு ஆறுதலாக இருந்தார்கள்.”

இவ்வாறு சஞ்சய் தத் கூறினார். 

மேலும் செய்திகள்