விதியை மீறி கட்டிடம் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு நோட்டீசு

விதியைமீறி கட்டிடம் கட்டிய சர்ச்சையில் பிரியங்கா சோப்ரா சிக்கி உள்ளார்.

Update: 2018-07-03 22:11 GMT
இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார் பிரியங்கா சோப்ரா. ஒரு படத்துக்கு ரூ.10 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார். ஹாலிவுட் படங்களிலும் நடிக்கிறார். அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாசுடன் காதல் ஏற்பட்டு அவரை திருமணம் செய்து கொள்ளவும் தயாராகி வருகிறார்.

இந்த நிலையில் விதியைமீறி கட்டிடம் கட்டிய சர்ச்சையில் பிரியங்கா சோப்ரா சிக்கி உள்ளார். இவருக்கு மும்பை மேற்கு அந்தேரி ஓசிவாரா பகுதியில் சொந்தமாக வணிக வளாகம் உள்ளது. அதன் அருகில் கூடுதலாக கட்டிடம் கட்டி அழகு நிலையத்துக்கு வாடகைக்கு விட்டு இருக்கிறார். இந்த கட்டிடத்துக்கு அவர் மும்பை மாநகராட்சியிடம் அனுமதி பெறவில்லை என்றும் விதியை மீறி கட்டி இருக்கிறார் என்றும் புகார்கள் கிளம்பின.

மும்பை மாநகராட்சிக்கும் 5 புகார்கள் வந்தன. அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது பிரியங்கா சோப்ரா விதியை மீறி கட்டிடம் கட்டி இருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவருக்கு மாநகராட்சி நோட்டீசு அனுப்பி உள்ளது. விதியை மீறிய குறிப்பிட்ட கட்டுமானத்துக்கு அபராதம் செலுத்தும்படியும் அதிக விதிமீறலில் இருக்கும் கட்டுமானங்களை இடிக்கும்படியும் நோட்டீசில் குறிப்பிட்டு உள்ளனர்.

இதற்கு பிரியங்கா சோப்ரா பதில் அனுப்பவில்லை. மாநகராட்சி விதித்த கெடுவுக்குள் கட்டுமானத்தை இடிக்காவிட்டால் மாநகராட்சி ஊழியர்களே இடித்து தள்ளுவார்கள் என்று அதிகாரி ஒருவர் கூறினார். 

மேலும் செய்திகள்