விமான நிலையத்தில் கெடுபிடி விசாரணை: அமெரிக்கா செல்ல நடிகைகள் தயக்கம், படப்பிடிப்புகள் பாதிப்பு

விமான நிலையத்தில் அதிக கெடுபிடி விசாரணையால் அமெரிக்க செல்ல நடிகைகள் தயக்கம் காட்டுகின்றனர். இதனால் அமெரிக்காவில் நடத்த திட்டமிட்ட படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Update: 2018-07-04 23:00 GMT
அமெரிக்காவில் தெலுங்கு நடிகைகள் சிலர் விபசாரத்தில் ஈடுபட்டதாக அங்குள்ள போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த நடிகைகள் பெயரை போலீசார் வெளியிடவில்லை என்றாலும் இனிமேல் அவர்களால் அமெரிக்கா செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டு உள்ளது.

அமெரிக்கா சென்ற நடிகை மெஹ்ரீனை விமான நிலையத்தில் அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தினர். இதுபோல் அமெரிக்கா செல்லும் மற்ற நடிகைகளையும் எதற்கு வந்தீர்கள்? என்று கேட்டு விமான நிலையத்திலேயே விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர அதிகாரிகள் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

விசாரணை கெடுபிடிகளில் சிக்குவதை தவிர்ப்பதற்காக நடிகைகள் அமெரிக்கா செல்ல தயங்குவதாக கூறப்படுகிறது. சில தெலுங்கு படங்களின் படப்பிடிப்புகளை அமெரிக்காவில் நடத்த திட்டமிட்டு இருந்ததாகவும் நடிகைகள் வர மறுத்ததால் படப்பிடிப்புகளை ரத்துசெய்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்