படுக்கைக்கு செல்லாததால் படங்களில் இருந்து நீக்கம் நடிகை மல்லிகா ஷெராவத் புகார்

நடிகை மல்லிகா ஷெராவத் தனக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவுகள் பற்றி கூறியிருக்கிறார்.

Update: 2018-07-05 23:45 GMT
ஹாலிவுட் நடிகைகள் போல் இந்திய நடிகைகளும் பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படையாக பேசுகிறார்கள். ஒவ்வொரு நடிகையும் தனக்கு நேர்ந்த அனுபவங்களை தினமும் வெளிப்படுத்தி வருகின்றனர். இப்போது நடிகை மல்லிகா ஷெராவத் தனக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவுகள் பற்றி கூறியிருக்கிறார். 

இவர் கமல்ஹாசனின் ‘தசாவதாரம்’ படத்தில் வில்லியாக நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர். சிம்புவின் ‘ஒஸ்தி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். இந்தி, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். மல்லிகா ஷெராவத் கூறியதாவது:–

‘‘இந்தியில் மர்டர் படம் மூலம் பிரபலமானேன். அப்போது ஒரு வயதானவர் பிடியில் சிக்கி கஷ்டப்பட்டேன். எனக்கு உதவ யாருமே இல்லை. தனித்து விடப்பட்டதாகவே உணர்ந்தேன். இந்தி படங்களில் என்னுடன் நடித்த கதாநாயகர்கள் பாலியல் தொல்லைகள் கொடுத்தனர். காட்சிகளில் நெருக்கமாக நடிப்பதுபோல் நிஜத்திலும் என்னுடன் இருக்கலாமே என்று அழைத்தார்கள். 

நான் படுக்கைக்கு செல்ல மறுத்துவிட்டேன். இதனால் அவர்களுடைய படங்களில் இருந்து என்னை நீக்கிவிட்டனர். இயக்குனர்கள் சிலர் நள்ளிரவில் எனக்கு போன் செய்த சம்பவங்களும் நடந்து இருக்கிறது. நான் அவர்களுக்கு உடன்பட்டு இருந்தால் நிறைய பட வாய்ப்புகள் கிடைத்து இருக்கும். 

என்னால் அவர்கள் விருப்பத்துக்கு இணங்கி செல்ல முடியாது. எனக்கு தன்னம்பிக்கையும் சுயமரியாதையும் இருக்கிறது. படவாய்ப்புக்காக படுக்கையை பகிரமாட்டேன். கதாநாயகர்களும், இயக்குனர்களும் எனக்கு தொல்லை கொடுத்ததை வெளியே சொன்னால் பழியை என்மீது திருப்பி விடுவார்கள் என்ற பயம் இருந்தது. அதனால்தான் இதை முன்பே சொல்லவில்லை.’’

இவ்வாறு மல்லிகா ஷெராவத் கூறினார்.

மேலும் செய்திகள்