நடிகைக்கு ‘செக்ஸ்’ தொல்லை: டி.வி. தொடர் டைரக்டர் நீக்கம்?

மலையாள பட உலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் இருக்கிறது.

Update: 2018-07-09 22:45 GMT
மலையாள பட உலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் இருக்கிறது. நடிகையை காரில் கடத்தி பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் நடந்தது. படுக்கைக்கு மறுக்கும் நடிகைகளுக்கு பட வாய்ப்பு தருவது இல்லை என்று பிரபல நடிகை பார்வதியும் குற்றம் சாட்டினார். மலையாள படங்களான போத்தன் வாவா, மை பாஸ் ஆகிய படங்களில் நடித்துள்ள நிஷா சாரங் மலையாள தனியார் டி.வி.யில் ஒளிபரப்பாகும் நகைச்சுவை தொடரில் நடித்து வருகிறார்.

இவரும் தற்போது டைரக்டர் மீது செக்ஸ் புகார் சொல்லி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

“சின்னத்திரை இயக்குனர் உன்னிகிருஷ்ணன் படப்பிடிப்பின்போது எனக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்தார். ஆசைக்கு இணங்கும்படி வற்புறுத்தி பல தடவை படுக்கைக்கு அழைத்தார். நான் உடன்படவில்லை. அவரை கண்டித்தேன். ஆனாலும் அவர் தொந்தரவு நீடித்தது. படப்பிடிப்பு நடக்கும்போது என்னை கிள்ளினார். சில்மிஷங்கள் செய்தார். மரியாதை குறைவாக நடத்தினார்.

இதுகுறித்து டி.வி. நிர்வாகத்திடம் புகார் செய்தேன். ஆனாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. குடும்ப சூழ்நிலை காரணமாக பொறுத்துக்கொண்டு அந்த தொடரில் நடித்தேன். திடீரென்று என்னை அந்த தொடரில் இருந்து நீக்கிவிட்டதாக உன்னிகிருஷ்ணன் தெரிவித்தார். இது எனக்கு அதிர்ச்சியை அளித்தது.”

இவ்வாறு நிஷா சாரங் கூறினார். நிஷா சாரங்குக்கு மலையாள நடிகர் மம்முட்டி ஆதரவு தெரிவித்து உள்ளார். திலீப்பின் முன்னாள் மனைவி மஞ்சு வாரியர் தலைவராக இருக்கும் பெண்கள் சினிமா சங்கமும் ஆதரித்துள்ளது. இந்த நிலையில் டைரக்டர் மீது நடவடிக்கை எடுப்பதாக டி.வி. நிர்வாகம் அறிவித்து உள்ளது. இதுகுறித்து நிஷா சாரங் கூறும்போது, “டைரக்டர் உன்னிகிருஷ்ணனை நீக்குவதாகவும் தொடரில் என்னை தொடர்ந்து நடிக்குமாறும் டி.வி. நிர்வாகம் கூறியுள்ளது. எனவே தொடரில் நடிப்பேன்” என்றார்.

இதற்கிடையே உன்னிகிருஷ்ணன் மீது கேரள பெண்கள் ஆணையம் வழக்கு பதிவு செய்து உள்ளது. சம்பந்தப்பட்ட இருவரின் வாக்குமூலத்தை பெற இருப்பதாக ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்