திலீப்பை எதிர்க்கும் நடிகைகளுடன் மலையாள நடிகர் சங்கம் 7–ந் தேதி ஆலோசனை

மலையாள நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் அடுத்த மாதம் 7–ந் தேதி நடைபெறும் என்று மோகன்லால் அறிவித்து உள்ளார்.

Update: 2018-07-20 23:00 GMT
நடிகை கடத்தல் வழக்கில் சிக்கியதால் மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கி வைக்கப்பட்ட திலீப்பை புதிதாக தலைவர் பொறுப்பை ஏற்ற மோகன்லால் சங்கத்தில் மீண்டும் சேர்த்ததற்கு நடிகைகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. ரம்யா நம்பீசன், கீது மோகன்தாஸ், ரீமா கல்லிங்கல், பாவனா ஆகியோர் நடிகர் சங்க உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். 

நடிகைகள் பத்மபிரியா, பார்வதி, ரேவதி ஆகியோர் சங்கத்தின் பொதுச்செயலாளர் இடைவேள பாபுவுக்கு கடிதம் எழுதி கண்டித்தனர். திலீப்பை சங்கத்தில் சேர்த்ததை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், இதுகுறித்து நடிகைகளை அழைத்து விவாதிக்க வேண்டும் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தனர். எதிர்ப்பை தொடர்ந்து மோகன்லால் பின்வாங்கி திலீப்பை சங்கத்தில் சேர்த்ததை நிறுத்தி வைத்தார். இந்த நிலையில் திலீப் பிரச்சினை குறித்து ஆலோசிக்க மலையாள நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 7–ந் தேதி நடைபெறும் என்று மோகன்லால் அறிவித்து உள்ளார். இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்குமாறு ரேவதி, பத்மபிரியா, பார்வதி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. 

இவர்கள் 3 பேரும் திலீப்பின் முன்னாள் மனைவி மஞ்சுவாரியர் தலைவராக இருக்கும் மலையாள சினிமா பெண்கள் கூட்டுக்குழு என்ற அமைப்பில் முக்கிய பொறுப்பில் உள்ளனர். திலீப்பை சங்கத்தில் சேர்க்கும் தீர்மானத்தை ரத்து செய்யும்படி செயற்குழுவில் வற்புறுத்த அவர்கள் முடிவு செய்துள்ளனர். ராஜினாமா செய்த நடிகைகள் அதை வாபஸ் பெற வேண்டும் என்று செயற்குழுவில் பேசுவார்கள் என்று தெரிகிறது.

மேலும் செய்திகள்