டைரக்டருக்கு ‘நெற்றியடி’ கொடுத்த நடிகை அஞ்சலி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது

லிசா என்ற படத்தின் படபிடிப்பின்போது நடிகை அஞ்சலி வீசிய தோசைக்கல் டைரக்டரின் நெற்றியை தாக்கியது.

Update: 2018-07-21 22:30 GMT
பிரபல ஒளிப்பதிவாளரும், விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடித்த ‘மதுரை வீரன்’ படத்தின் டைரக்டருமான பி.ஜி.முத்தையா அடுத்து, ‘லிசா’ என்ற படத்தை தயாரிக்கிறார். புதுமுக டைரக்டர் ராஜு விஸ்வநாத் டைரக்டு செய்கிறார். கதாநாயகியாக அஞ்சலி நடிக்கிறார்.

‘ஏமாலி’ படத்தில் கதாநாயகனாக நடித்த ஷாம், வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது, ஒரு திகில் படம். ‘3டி டெக்னாலஜி ஸ்டீரியோ ஸ்கோப்’ என்ற அதிநவீன தொழில்நுட்பத்தில் தயாராகிறது. இந்த தொழில்நுட்பத்தில் தயாராகும் முதல் இந்திய திரைப்படம், இது.

படத்துக்காக, ஒரு சண்டை காட்சி படமாக்கப்பட்டது. அஞ்சலி, ஒரு தோசைக்கல்லை தூக்கி கேமரா முன்பு வீச வேண்டும். ‘‘ஆக்‌ஷன்’’ என்று டைரக்டர் சொன்னதும், அஞ்சலி வீசிய தோசைக்கல் எதிர்பாராதவிதமாக பறந்து வந்து கேமரா அருகில் நின்ற டைரக்டரின் நெற்றியை தாக்கியது. அதில், அவருடைய கண் புருவம் கிழிந்து ரத்தம் கொட்டியது.

வலியை பொருட்படுத்தாத டைரக்டர், அந்த காட்சி எப்படி வந்திருக்கிறது? என்பதை டி.வி.யில் பார்த்தார். எதிர்பார்த்ததை விட பிரமாதமாக வந்திருப்பதை பார்த்து சந்தோ‌ஷப்பட்ட டைரக்டர், அதன் பிறகே ஆஸ்பத்திரிக்கு புறப்பட்டார்.

அவர் நெற்றியில் தையல் போட்டு திரும்புவதற்கு நேரமாகி விட்டதால், அன்று படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. 

இந்த படத்தில், இந்தி பட உலகின் பிரபல நடிகர் மக்ராந்த் தேஷ் பாண்டே, மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர், மறைந்த நடிகர் ரகுவரனின் இடத்தை பிடிப்பார் என்று தமிழ் பட உலகில் பேசப்படுகிறது.

மேலும் செய்திகள்