பாலியல் பற்றி சர்ச்சை கருத்து, மம்தா மோகன்தாசுடன் ரீமா கல்லிங்கல் மோதல்

கேரளாவில் நடிகையை காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதான நடிகர் திலீப்பை மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கியதும், தற்போது மீண்டும் சங்கத்தில் சேர்த்ததும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2018-07-22 22:48 GMT
திலீப் சேர்க்கப்பட்டதை கண்டித்து ரம்யா நம்பீசன், கீது மோகன்தாஸ், ரீமா கல்லிங்கல் ஆகியோர் நடிகர் சங்க உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர்.

இந்த நிலையில் மம்தா மோகன்தாஸ் பாலியல் விவகாரம் குறித்து பேட்டி அளித்துள்ளார். அவர் கூறும்போது, “பாலியல் ரீதியாக நடிகைகள் பாதிக்கப்படுவதற்கு அவர்களும் காரணமாக இருக்கிறார்கள். அதுபோன்ற நடவடிக்கைகளை அவர்கள் உருவாக்கி கொள்வதாக கருதுகிறேன். இந்த பிரச்சினையில் நடிகைகளுக்கும் பாதி பொறுப்பு இருக்கிறது” என்றார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

மம்தா மோகன்தாசுக்கு, ரீமாகல்லிங்கல், அவரது கணவரும் இயக்குனருமான ஆஷிக் அபு ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். ரீமா கல்லிங்கல் கூறும்போது, “பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாலோ, கடத்தப்பட்டாலோ பெண்கள் எப்படி பொறுப்பாக முடியும். பாலியல் வன்கொடுமை செய்தவன்தான் பொறுப்பு. தவறு செய்தவர்களை பாதுகாக்கும் சமூகமும் பொறுப்பு ஏற்கவேண்டும். பாதிக்கப்பட்டவர் களுக்கு ஏதும் செய்யாவிட்டாலும் அவர்களை நீங்கள் அவமானப்படுத்தாமல் இருப்பது நல்லது” என்று கூறினார்.

இதற்கு விளக்கம் அளித்துள்ள மம்தா மோகன்தாஸ், “எனது கருத்தை தவறாக புரிந்துள்ளனர். பெண்ணோ சிறுமியோ பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதை யாரும் ஆதரிக்கமாட்டார்கள். பெண்கள் பாதிக்கப்படும்போது அவர்களுக்கும் அதில் பாதி பொறுப்பு இருக்கிறது என்று நான் சொன்னது எனது சொந்த கருத்து. சினிமா பிரபலங்களுக்கு குரல் கொடுப்பதுபோல் சாதாரண பெண்கள் பாதிக்கப்படும்போது குரல் கொடுப்பது இல்லை. அவர்களுக்காகவும் குரல் கொடுக்க வேண்டும்” என்றார். இவர்கள் மோதல் மலையாள பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்