உலகப்புகழ் பெற்ற லண்டன் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் அமையவிருக்கும் தீபிகா படுகோன் மெழுகுச்சிலை

உலகப்புகழ் பெற்ற லண்டன் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் தீபிகா படுகோன் மெழுகுச்சிலை நிறுவப்படவுள்ளது. #DeepikaPadukone #MadameTussauds

Update: 2018-07-23 13:38 GMT
புதுடெல்லி,

மெழுகுச்சிலைக்கு பெயர் பெற்ற லண்டன் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகம் உலகப்புகழ் பெற்றது. உலகின் மிகச்சிறந்த சூப்பர் ஸ்டார்களின் மெழுகுச்சிலை இங்கு வைக்கப்படுவது வழக்கம். மேடம் டுசாட்ஸ், உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தனது அருங்காட்சியகத்தைத் தொடங்கியுள்ளது. அந்த வகையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லியிலும் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகம் தொடங்கப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் வெளிவந்த பத்மாவத் படத்தின் நாயகி தீபிகா படுகோன்னின் மெழுகுச்சிலை லண்டன் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் அடுத்த ஆண்டு நிறுவப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியிலுள்ள அருங்காட்சியத்திலும் இச்சிலை உருவாகுவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள தீபிகா படுகோன் மெழுகுச்சிலை வடிவமைப்பாளர்களுடன் சிலையை வடிவமைப்பது குறித்து கலந்துரையாடி வருகிறார். இது குறித்து அவர் கூறுகையில், “லண்டன் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் எனக்கு மெழுகுச்சிலை நிறுவுவது நினைத்தால் மகிழ்ச்சியாகவுள்ளது. மெழுகுச்சிலை வடிவமைப்பாளர்களுடன் அமர்ந்து உரையாடுவது சிறந்த அனுபவமாகும். சிலை நிறுவப்படும் நாளை எதிர்நோக்கியுள்ளேன்” எனக் கூறினார்

பத்மாவத் படத்தின் நாயகியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த தீபிகா படுகோன், தற்போது ஷாருக்கான் நடித்து வரும் ஜீரோ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்