பாலியல் வழக்கில் நான் கைதானதாக வதந்தி பரப்புவதா? ஸ்ரீரெட்டி ஆவேசம்

நான் பாலியல் தொழிலாளி அல்ல. இதுபோல் வதந்திகளை பரப்பி இழிவான செயலில் ஈடுபடவேண்டாம்’’ என்று நடிகை ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.

Update: 2018-07-25 23:15 GMT
பட வாய்ப்பு தருவதாக ஏமாற்றி தெலுங்கு பட உலகினர் படுக்கையில் தன்னை பயன்படுத்தியதாக நடிகை ஸ்ரீரெட்டி புகார் தெரிவித்து திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தினார். படுக்கைக்கு அழைத்த நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பெயர்களையும் வெளியிட்டார்.

இப்போது சென்னையில் முகாமிட்டு தமிழ் நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் புகார் கூறிவருகிறார். ஆதாரம் இல்லாமல் யார் மீதும் குற்றம் சொல்ல கூடாது என்று தென்னிந்திய நடிகர் சங்கம் அவரை கண்டித்தது. தன்னிடம் வீடியோ ஆதாரம் இருப்பதாகவும் போலீஸ் விசாரணை நடத்தினால் அவற்றை வெளியிடுவேன் என்றும் அவர் கூறினார்.

டைரக்டரும், நடிகருமான வாராகி சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் ஸ்ரீரெட்டி மீது புகார் அளித்தார். நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் புகார் சொல்லி மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியில் ஸ்ரீரெட்டி ஈடுபடுவதாகவும் விபசாரம் மற்றும் மிரட்டல் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் கூறியிருந்தார்.

இந்த நிலையில் ஸ்ரீரெட்டியை போலீசார் கைது செய்து விட்டதாக இணையதளங்களில் தகவல் பரவியது. இதனை ஸ்ரீரெட்டி மறுத்ததுடன் வதந்தி பரப்பியவர்களுக்கு கண்டனமும் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில், ‘‘நான் பாலியல் தொழிலாளி என்றும் என்னை போலீசார் கைது செய்து விட்டனர் என்றும் வதந்தி பரப்புகிறார்கள். நான் பாலியல் தொழிலாளி அல்ல. இதுபோல் வதந்திகளை பரப்பி இழிவான செயலில் ஈடுபடவேண்டாம்’’ என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்