‘காற்றின் மொழி’ படம் ‘‘பெண்களுக்கு தன்னம்பிக்கை தரும்’’ ஜோதிகா பேட்டி

இந்தியில் வித்யாபாலன் நடித்து திரைக்கு வந்த ‘தும்ஹாரி சுலு’ படம் பெரிய வெற்றி பெற்றது. அந்த படம் ‘காற்றின் மொழி’ என்ற பெயரில் தமிழில் தயாராகிறது.

Update: 2018-07-27 23:15 GMT
வித்யாபாலன் கதாபாத்திரத்தில் ஜோதிகா நடிக்கிறார். ராதாமோகன் டைரக்டு செய்கிறார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே மொழி படம் வந்தது.

காற்றின்மொழி படத்தில் விதார்த், லட்சுமி மஞ்சு, மனோபாலா, குமரவேல், உமா பத்மநாபன், மோகன்ராம் ஆகியோரும் நடிக்கின்றனர். இந்த படத்தில் ஜோதிகா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன. ஒரே கட்ட படப்பிடிப்பிலேயே தனது சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தையும் முடித்து கொடுத்துள்ளார்.

சென்னையில் நடந்த படப்பிடிப்பு இறுதி நாளில் படக்குழுவினரை மகிழ்விக்கும் வகையில் அனைவருக்கும் ஜோதிகா பட்டு சேலை, பட்டு வேட்டி பரிசாக வழங்கினார். அவர்களுடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டார். கேக்கும் வெட்டினார்.

இந்த படத்தில் நடித்தது குறித்து ஜோதிகா கூறும்போது, ‘‘மிகச்சிறந்த கதை, கதாபாத்திரம் என்று அனைத்தும் இந்த படத்தில் எனக்கு சிறப்பாக அமைந்துள்ளதில் சந்தோ‌ஷம். பெண்களுக்கு மேலும் தன்னம்பிக்கையை தரும் படமாக இது இருக்கும். அந்த அளவுக்கு இந்த படத்தில் பெண்களை உயர்வாக காட்டி உள்ளார்கள். மீண்டும் ராதாமோகன் குழுவினரோடு சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வத்தையும் இந்த படம்  தந்து இருக்கிறது’’ என்றார். நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் தனஞ்செயன், இயக்குனர் ராதாமோகன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்