நடிகை ஸ்ரீரெட்டி மீது அவதூறு வழக்கு தொடருவேன்’’ - டைரக்டர் வாராகி பேட்டி

நடிகை ஸ்ரீரெட்டி மீது அவதூறு வழக்கு தொடருவேன் என்று டைரக்டர் வாராகி பேட்டி அளித்துள்ளார்.

Update: 2018-07-28 23:15 GMT
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, ஆந்திராவை சேர்ந்த  நடிகர்கள்–நடிகைகள்– டைரக்டர்கள்–தயாரிப்பாளர்கள் பட வாய்ப்பு அளிப்பதாக ஏமாற்றி தன்னை படுக்கையில் பயன்படுத்தியதாகவும், சினிமா வாய்ப்பு தேடும் நடிகைகளை பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாக்குவதாகவும் பரபரப்பான புகார்களை கூறினார்.

இப்போது அவர் சென்னைக்கு வந்திருக்கிறார். தமிழ் நடிகர்கள், டைரக்டர்கள் மீது பரபரப்பான புகார்களை கூறி வருகிறார். இதை நடிகரும், டைரக்டருமான வாராகி கண்டித்தார்.

 ஸ்ரீரெட்டி தமிழ் பட உலகினர் மீது ‘செக்ஸ்’ புகார் கூறி, மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார் என்றும், அவரே விரும்பி சிலருடன் படுக்கையை பகிர்ந்து கொண்டதாக தெரிவித்து இருப்பதால், விபசார பிரிவு மற்றும் மிரட்டல் பிரிவுகளில் ஸ்ரீரெட்டி மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு, போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில்  புகார் மனு கொடுத்தார்.

தன்னை பாலியல் தொழிலாளி என்று கூறிய வாராகி மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தி, போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் ஸ்ரீரெட்டி  புகார்  மனுவை        கொடுத்தார். இவர்களின் மோதல் பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்ரீரெட்டி புகாருக்கு பதில் அளித்து டைரக்டர் வாராகி கூறியதாவது:–

‘‘நடிகை ஸ்ரீரெட்டி தனது முக நூல் பக்கத்தில் என்னை அவதூறான வார்த்தைகளால் திட்டியிருக்கிறார். அடிப்பேன் என்றும் மிரட்டியுள்ளார். என் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கமி‌ஷனர் அலுவலகத்தில் மனுவும் கொடுத்து இருக்கிறார். இது தொடர்பாக போலீஸ் விசாரணை நடத்தினால், சந்திக்க தயார்.

நான், பெண்களை மதிப்பவன். நடிகைகள் பட வாய்ப்புகளுக்காக படுக்கைக்கு செல்வதாக கொச்சைப்படுத்தி பேசி வருகிறார். உடன்பட்டு சிலருடன் படுக்கையை பகிர்ந்ததாகவும் பட்டியல் வெளியிட்டுள்ளார். ஐதராபாத்தில் அரை நிர்வாண போராட்டம் நடத்தி மலிவான விளம்பரமும் தேடினார். என்னை தரம் தாழ்ந்த வார்த்தைகளால் திட்டி மிரட்டி வரும் ஸ்ரீரெட்டி மீது கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர இருக்கிறேன்.’’

இவ்வாறு வாராகி கூறியிருக்கிறார்.

மேலும் செய்திகள்