‘‘டுவிட்டரில் எனது பெயரில் மோசடி’’ நகைச்சுவை நடிகர் யோகிபாபு

வடிவேல், சந்தானம் கதாநாயகர்கள் ஆனபிறகு நகைச்சுவை ஏரியாவில் மளமளவென வளர்ந்து நிற்கிறார் யோகிபாபு.

Update: 2018-07-29 22:30 GMT
யோகிபாபு பெரிய கதாநாயகர்கள் படங்களில் நடிக்கிறார். நயன்தாராவுடன் டூயட்டும் பாடினார். சம்பளமும் உயர்ந்துள்ளது. முன்பெல்லாம் ஒரு நாளைக்கு ரூ.30 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் வரை வாங்கியவர். இப்போது ரூ.1.50  லட்சம் பெறுகிறார்.

தமிழ் பட உலகில் பிரபல காமெடியராகி விட்டதால் ரசிகர்கள் யோகிபாபு படங்களை வைத்து கேலி சித்திரங்களையும், மீம்ஸ்களையும் உருவாக்கி சமூக வலைத்தளங்களில் வைரலாக்குகிறார்கள். பிடிக்காத நடிகர்கள், அரசியல் தலைவர்களை விமர்சிக்க யோகிபாபு படங்களை பயன்படுத்துகின்றனர். அவரது பெயரில் டுவிட்டரில் போலி கணக்குகளும் உருவாகி உள்ளன.

அரசியல் தலைவர்களை கேலி செய்வதுபோல் யோகிபாபு பெயரில் உள்ள டுவிட்டரில் கருத்துக்கள் வெளியாகி தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவருக்கு கண்டனங்களும் எழுந்தன. இதற்கு விளக்கம் அளித்து பேசிய வீடியோவை யோகிபாபு சமூக வலைத்தளத்தில் நேற்று வெளியிட்டார்.

அந்த வீடியோவில், ‘‘கடந்த 2, 3 நாட்களாக டுவிட்டரில் அரசியல் தலைவர்களை நான் கேலி செய்வதுபோல் கருத்துக்கள் வருகின்றன. நான் அவ்வாறு சொல்லவில்லை. எனது பெயரில் டுவிட்டரில் சில போலி கணக்குகள் உள்ளன. அவற்றில் இருந்துதான் இதுபோன்ற தவறான தகவலை வெளியிடுகிறார்கள். அவற்றை யாரும் பின்பற்ற வேண்டாம். நான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை’’ என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்