அந்தரங்க வீடியோ இருப்பதாக நடிகைக்கு இமெயிலில், பணம் கேட்டு மிரட்டல்

இந்தி நடிகை தீப்தி நேவலிடம் இமெயிலில் பணம் கேட்டு மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

Update: 2018-08-03 23:00 GMT
பிரபல இந்தி நடிகை தீப்தி நேவல். இவர் ஏக் பார் பிர், சாத் சாத், ஹம் பாஞ்ச், லீலா, யாத்ரா, பிராக் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். டைரக்டும் செய்துள்ளார். தீப்தி நேவலுக்கு ஒரு இமெயில் வந்தது.  அதில் ‘‘உங்களுடைய அந்தரங்க வீடியோ எங்களிடம் உள்ளது. நீங்கள் இணையதளத்தில் எதையெல்லாம் பார்க்கிறீர்கள் என்ற விவரங்களும் தெரியும். உங்களை பற்றிய ரகசியங்களையும் வீடியோவையும் வெளியிடாமல் இருக்க எங்களுக்கு இன்னும் 24 மணிநேரத்தில் 5,600 டாலரை தர வேண்டும்’’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. 

உங்களுடைய மெயில் பாஸ்வேர்டு இதுதானே என்று அதையும் சரியாக சொல்லி இருந்தார்கள். இதனால் நடிகை தீப்தி நேவல் அதிர்ச்சியானார். தனது பாஸ்வேர்டு அந்த கும்பலுக்கு எப்படி கிடைத்தது என்றும் குழம்பினார். இதுகுறித்து மும்பை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மெயிலை பார்த்து பயப்பட வேண்டாம் என்றும் அவர்களிடம் எந்த வீடியோவும் இருக்காது என்றும் தீப்தியிடம் போலீசார் தெரிவித்தனர். மும்பை சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி ரிதேஷ் பாட்டியா கூறும்போது, ‘இது போலியான பிளாக் மெயில் மிரட்டல். எனக்கு கூட 3 ஆயிரம் டாலர் கேட்டு இமெயில் வந்தது. அதுபோலி என்பதால் கண்டுகொள்ளவில்லை’ என்றார். 

நடிகை தீப்தி நேவல் கூறும்போது, ‘இந்த இமெயில் மிரட்டலை கண்டுகொள்ள வேண்டாம். விசாரிக்கிறோம் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர். எனவே இதுகுறித்து பேச விரும்பவில்லை’ என்றார்.

மேலும் செய்திகள்