‘‘மணிரத்னம் கண்டுபிடிக்க முடியாத கதை’’ -சுஹாசினி பேச்சு

படத்தின் டிரைலரை பார்த்த பிறகு கூட, மணிரத்னத்தால் கதையை கண்டுபிடிக்க முடியவில்லை என்று படவிழாவில் சுஹாசினி பேசினார்.

Update: 2018-08-04 23:30 GMT
மசாலா பிக்சர்ஸ் சார்பில் ஆர். கண்ணன் தயாரித்து இயக்க, அதர்வா முரளி, மேகா ஆகாஷ், இந்துஜா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘பூமராங்’. ரதன் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படத்தின் இசை தகட்டினை கலைப்புலி எஸ் தாணு, சத்யஜோதி தியாகராஜன் வெளியிட, சுஹாசினி மணிரத்னம் மற்றும் சமுத்திரக்கனி ஆகிய இருவரும் பெற்றுக் கொண்டனர். முன்னதாக இயக்குனர் மணிரத்னம் படத்தின் டிரைலரை பார்த்து படக்குழுவை வாழ்த்தினார். 

விழாவில் சுஹாசினி பேசியதாவது:–

‘‘மூன்றாம் பிறை படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க நான் பெங்களூரு போனபோது, சத்யஜோதி தியாகராஜனை பார்த்த நினைவுகள் இந்த நேரத்தில், இந்த மேடையில், நினைவுக்கு வருகிறது. திட்டமிட்டபடி, நேர்த்தியான முறையில் படப்பிடிப்பு நடக்கும். மெட்ராஸ் டாக்கீசின் செல்லப்பிள்ளை கண்ணன். எங்கள் கம்பெனியில் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் அவர் பங்குதான் அதிகம் இருக்கும். அவருக்கு நகைச்சுவை உணர்வும் ரொம்ப அதிகம். 

என் வாழ்க்கையில், 30 ஆண்டுகள் மணிரத்னத்துடன் கழித்திருக்கிறேன். கமல்ஹாசனும், மணிரத்னமும் சந்திக்காத பிரச்சினைகளே இல்லை. இன்றும் கமல் ‘விஸ்வரூபம்–2’ படத்தை பல போராட்டங்களுக்குப்பின், ரிலீஸ் செய்ய இருக்கிறார். அதர்வா உங்கள் திறமைகள் உங்களுக்கு தெரியும், யாருக்கும் உங்களை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. படத்தின் டிரைலரை பார்த்த பிறகு கூட, மணிரத்னத்துக்கு இது என்ன மாதிரி படம் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுவே படத்தின் முதல் வெற்றி.’’ 

இவ்வாறு அவர் கூறினார்.

இயக்குனர் கண்ணன் பேசியதாவது:–

‘‘2008–ம் ஆண்டில், ‘ஜெயம்கொண்டான்’ படம் ரிலீஸ் ஆகியது, 2018–ல் ‘பூமராங்’ வருகிறது. இதுவரை மொத்தம் 7 படங்கள் இயக்கியிருக்கிறேன். என் குரு மணிரத்னத்தை அறிமுகப்படுத்திய சத்யஜோதி தியாகராஜன், எனக்கு முதல் பட வாய்ப்பை கொடுத்தது, பெருமையான வி‌ஷயம். சுஹாசினியை சந்தித்ததுதான் என் வாழ்வின் திருப்புமுனை. கடைக்குட்டி சிங்கம் படத்துக்கு பிறகு விவசாயத்தை பற்றிய ஒரு படம், ‘பூமராங்.’

130 கோடி மக்கள் இருந்தும் நஷ்டத்தில் போகிற ஒரு துறை விவசாய துறைதான். அதை படம் பேசும். நட்புக்கு மரியாதை கொடுக்கும் மனிதர் சமுத்திரக்கனி. அவருடன் என் நட்பு வாழ்நாள் முழுக்க தொடர ஆசை. வழக்கமான மும்பை நாயகியாக இல்லாமல், சென்னை அண்ணா நகர் பெண்ணை நாயகியாக நடிக்க வைத்திருக்கிறோம். இசையமைப்பாளர் ரதன் தமிழ் சினிமாவில் ஒரு ‘ரவுண்டு’ வருவார். இது கமர்சியல் படமாகவும், நல்ல கருத்தை சொல்லும் படமாகவும் இருக்கும்.’’ 

இவ்வாறு அவர் பேசினார்

நடிகர் அதர்வா பேசியதாவது:–

‘‘நாம் நல்லதோ, கெட்டதோ எது செய்தாலும் அது ஒரு நாள் நம்மை வந்து சேரும் என்பது தான் பூமராங். கண்ணன் தயாரிப்பாளர்களின் இயக்குனர் என்பது உண்மைதான். 50 நாளில் படத்தை முடிப்பேன் என சொல்லி, 43 நாட்களில் மிக வேகமாக படத்தை முடித்து விட்டார். மொத்த குழுவின் உழைப்பு அபரிமிதமானது. எங்களுக்கு முழு சுதந்திரமும் கொடுத்தார். தயாரிப்பாளராகவும் முழு கவனத்துடன் இருப்பார். சுஹாசினியுடன் நடித்தது எனக்கு பெருமை.’’

இவ்வாறு அதர்வா பேசினார்.

மேலும் செய்திகள்