நடிகர்கள் ஒத்துழைக்க மறுத்தால் “ராஜினாமா செய்வது பற்றி யோசிப்பேன்” - மோகன்லால்

நடிகர்கள் ஒத்துழைக்க மறுத்தால் ராஜினாமா செய்வது பற்றி யோசிப்பேன் என நடிகர் மோகன்லால் தெரிவித்துள்ளார்.

Update: 2018-08-08 22:45 GMT
மலையாள நடிகர் சங்கத்தில் மோதல் வலுத்து வருகிறது. நடிகை கடத்தல் வழக்கில் சிக்கியதால் சங்கத்தில் இருந்து நீக்கி வைக்கப்பட்ட திலீப்பை மோகன்லால் புதிய தலைவரானதும் மீண்டும் சேர்த்தார். இது நடிகைகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மோகன்லால் செயலை கண்டித்தனர்.

ரம்யா நம்பீசன், கீது மோகன்தாஸ், ரீமா கல்லிங்கல் ஆகியோர் நடிகர் சங்க உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். மலையாள பெண்கள் சினிமா கூட்டுக்குழுவும் மோகன்லாலுக்கு எதிராக களம் இறங்கியது. எதிர்ப்புகள் வலுப்பதால் நடிகர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்ய மோகன்லால் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் மலையாள நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் கொச்சியில் நடந்தது. இதில் அதிருப்தி கோஷ்டியை சேர்ந்த நடிகைகள் ரேவதி, பத்மபிரியா ஆகியோரும் கலந்துகொண்டனர். கூட்டம் முடிந்ததும் மோகன்லால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

“நடிகர் சங்கத்தில் தற்போது எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்தும் அவற்றுக்கு தீர்வு காண்பது குறித்தும் செயற்குழுவில் ஆலோசித்தோம். பெண்கள் சினிமா கூட்டுக்குழுவினரின் கொள்கைகளை நிறைவேற்றுவதில் தீவிரம் காட்டுவோம். அவர்கள் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும். எல்லோருடைய பிரச்சினைகளையும் கேட்டு அவற்றை தீர்த்து வைப்போம்.

சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்ய நான் முடிவு செய்யவில்லை. நடிகர்-நடிகைகள் எனக்கு ஒத்துழைப்பு கொடுக்காத நிலைமை ஏற்பட்டால் அப்போது ராஜினாமா செய்வது குறித்து யோசிப்பேன்.” இவ்வாறு மோகன்லால் கூறினார்.

மேலும் செய்திகள்