`எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்' படத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக சத்யராஜ்!

`எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்' படத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக சத்யராஜ் நடிக்கிறார்.

Update: 2018-08-09 21:45 GMT
மணிரத்னம், ஏ.ஆர்.முருகதாஸ் ஆகிய இருவரிடமும் உதவியாளராக இருந்தவர், சர்ஜுன். யூ டியூப்பில் பல குறும் படங்களை இயக்கியிருக்கிறார். இவருடைய கதை-திரைக்கதை-டைரக்‌ஷனில் உருவாகியிருக்கும் திகில் படம், `எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்.' இந்த படத்தை பற்றி டைரக்டர் சர்ஜுன் கூறியதாவது:-

``இது, ஒரு குற்றப்பின்னணியிலான திகில் படம். படத்தின் பெயரிலேயே திகில் படம் என்பதை சொல்லியிருக்கிறோம். இதில், சத்யராஜ் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக நடித்து இருக்கிறார். வரலட்சுமி, நடன கலைஞராக நடித்துள்ளார். அவரை கிஷோர், புதுமுகம் விவேக் ஆகிய இருவரும் சேர்ந்து கடத்துகிறார்கள். அவரை ஏன் கடத்துகிறார்கள் என்பதே கதையின் கரு.

சத்யராஜ், அவருடைய 8 வயது மகள் ஆகிய இருவர் சம்பந்தப்பட்ட `பிளாஷ்பேக்' காட்சி, படத்தில் முக்கிய இடம் பெறுகிறது. இதில், சத்யராஜின் மனைவியாக கவுசல்யா நடித்து இருக்கிறார். சென்னை, புதுச்சேரி ஆகிய இடங்களில் படம் வளர்ந்து இருக்கிறது. சி.பி.கணேஷ், சுந்தர் அண்ணாமலை ஆகிய இருவரும் தயாரித்துள்ளனர். கிளாப் போர்டு புரொடக்‌ஷன்ஸ் வி.சத்யமூர்த்தி படத்தை வாங்கி வெளியிடுகிறார்.

மேலும் செய்திகள்