“எனக்கும் சூர்யாவுக்கும் வெற்றி எளிதாக கிடைக்கவில்லை” படவிழாவில் கார்த்தி பேச்சு

உதயா கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘உத்தரவு மகாராஜா’. பிரபு, நாசர், பிரியங்கா, கோவை சரளா ஆகியோரும் நடித்துள்ளனர். ஆஷிப் குரேஷி இயக்கி உள்ளார்.

Update: 2018-08-19 23:51 GMT
இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் நடிகர் கார்த்தி கலந்து கொண்டு பேசியதாவது:

“பிரபுவுடன் இணைந்து உதயா கதாநாயகனாக நடித்துள்ள உத்தரவு மகாராஜா படம் வெற்றிபெறும். சினிமாவில் அங்கீகாரம் கிடைக்க அவர் நம்பிக்கையோடு காத்திருக்கிறார். இந்த படத்தில் புதியவர்களூக்கு வாய்ப்பு கொடுத்து இருக்கிறார். புதிய கதாநாயகி நடித்து இருக்கிறார். இதற்கு பெரிய மனது வேண்டும். ஏனென்றால் சினிமாவில் புதியவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது கஷ்டம். இங்கு ஓடுகிற குதிரையில்தான் பணம் கட்டுவார்கள்.

சிவகுமார் தனது மகன்கள் இருவரையும் எளிதாக சினிமாவுக்குள் கொண்டு வந்து விட்டார் என்று பேசினார்கள். நானும் சூர்யாவும் எளிதாக இங்கு வந்துவிடவில்லை. காத்திருந்துதான் இந்த இடத்துக்கு வந்து இருக்கிறோம். சினிமாவில் முதலில் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் காத்திருப்புதான். ஒரு வெற்றிக்கும் இன்னொரு வெற்றிக்கும் இடையில் பெரிய காத்திருப்பு உள்ளது.

கடைக்குட்டி சிங்கம் படத்தை பார்த்த பலரும் சிறுத்தைக்கு பிறகு இந்த படத்தில்தான் சிறப்பாக நடித்து இருக்கிறீர்கள்? என்று பாராட்டினார்கள். இடையில் நிறைய படம் நடித்து இருக்கிறேன். ஆனாலும் கடைக்குட்டி சிங்கம்தான் நல்ல படம் என்கின்றனர். அதற்கு 8 வருடங்கள் ஆகி இருக்கிறது.” இவ்வாறு அவர் பேசினார்.

நடிகர்கள் விவேக், அருண்குமார், பொன் வண்ணன், ஸ்ரீமன், டைரக்டர் விஜய், தயாரிப்பாளர்கள் கதிரேசன், ஏ.எல்.அழகப்பன், எஸ்.எஸ்.துரைராஜ், கே.ராஜன், இசையமைப்பாளர் நரேன் பாலகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்