‘‘எனக்கு தைரியம் நிறைய இருக்கிறது’’ –கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் அரசியல் பணிகளுக்கு இடையில் டி.வி. நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார். அடுத்து இந்தியன்–2 படத்தில் நடிக்கவும் தயாராகி வருகிறார்.

Update: 2018-08-22 00:00 GMT
இந்தியன் முதல் பாகத்தில் லஞ்சத்தை எதிர்த்து நின்ற கமல் இரண்டாம் பாகத்தில் மோசமான அரசியல்வாதிகளுடன் மோதுகிறார். தனது மக்கள் நீதி மய்யம் கட்சி கொள்கைகளை பிரசாரம் செய்ய உதவும் படமாக இதை பயன்படுத்த திட்டமிட்டு உள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக இந்த படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை ‌ஷங்கர் இயக்குகிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

இந்த நிலையில் டி.வி. நிகழ்ச்சியில் பங்கேற்ற கமல்ஹாசனிடம் கர்நாடக தேர்தலின்போது நடிகர் பிரகாஷ்ராஜ் துணிச்சலாக பேசினார். அதுபோல் இங்குள்ள நடிகர்கள் அரசியல் குறித்தும் அரசியல்வாதிகள் குறித்தும் தைரியமாக பேசுவதில்லையே என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்து கமல்ஹாசன் பேசியதாவது:–

‘‘பிரகாஷ்ராஜ் பேசியதற்காக அவரை நான் பாராட்டுகிறேன். அதற்கு முன்பாகவே நான் இப்படி சொல்லிக்கொண்டிருந்தேன் என்பது உங்களுக்கு மட்டுமல்ல பிரகாஷ்ராஜுக்கே தெரியும். தைரியம் பற்றி இங்கே குறிப்பிட்டீர்கள். எனக்கு தைரியம் நிறையவே இருக்கிறது. அதே சமயம் மரியாதை குணமும் இருக்கிறது.

எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதனை தைரியமாகவும் மரியாதையுடனும் சுட்டிக்காட்டவே நான் விரும்புகிறேன். இங்கு மரியாதை குறைவாக பேசினால்தான் தைரியம் என்று நினைக்கிறார்கள். எல்லோரும் அப்படி இல்லை. எனக்கு மட்டுமல்ல மக்களுக்கும் மரியாதையும் தைரியமும் இருக்கிறது. அவர்கள் மரியாதையுடன் கோட்டையில் உட்காரவும் வைப்பார்கள். அதே மரியாதையுடன் தைரியமாக கோட்டையை விட்டு வீட்டுக்கும் அனுப்புவார்கள்.

இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

மேலும் செய்திகள்