‘‘மத நம்பிக்கையில், அப்பாவுடன் எனக்கு கருத்து வேறுபாடு’’– நடிகை சுருதிஹாசன்

சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளது என்று நடிகை சுருதிஹாசன் கூறினார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:–

Update: 2018-08-25 22:45 GMT
‘‘நான் சினிமாவில் அறிமுகமாகி இது பத்தாவது ஆண்டு. இதுவரை நடித்த படங்கள் அனைத்தும் நான் விருப்பப்பட்டு தேர்வு செய்தவை. இதற்காக நான் இப்போதும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த பத்தாண்டு கால திரையுலக வாழ்க்கை நன்றாகவே இருந்தது. இதைப் போலவே எதிர்காலத்திலும் எனக்கு பிடித்த கேரக்டர்களிலும், கதைகளிலும் மட்டுமே நடிப்பேன்.

மத நம்பிக்கை குறித்து எனக்கும் அப்பாவிற்கும் வேறுபட்ட கருத்து இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை நான் ‘ஸ்ப்ரிச்சுவல்’ சக்தி ஒன்று இருப்பதாக நம்புகிறேன். ஆனால் அது கோவில், தேவாலயம், மசூதிகளில் இருக்கிறதா? என்று கேட்டால் அதற்கு என்னிடம் நேரடியான பதில் இல்லை. ஆனால் அனைத்தையும் நம்புகிறேன்.

சினிமாவில் மட்டுமல்லாமல் இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பாகவே இருக்கிறார்கள். எனக்கு திரைத்துறையில் கிடைக்கவேண்டிய மரியாதையும், மதிப்பும் கிடைக்கிறது. நான் திரைத்துறையில் சந்தித்தவர்கள் அனைவரும் நல்லவர்கள்தான். தற்போது மகேஷ் மஞ்சரேக்கரின் இந்தி படத்தில் நடித்து வருகிறேன். அப்பாவுடன் இணைந்து நடித்து வரும் ‘சபாஷ் நாயுடு’வின் பணிகள் விரைவில் தொடங்கும்.

நியூயார்க்கில் இந்திய சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டதையும், அதில் தேசப்பற்று பாடலை பாடியதையும் எண்ணி பெருமை அடைகிறேன்’’

இவ்வாறு சுருதிஹாசன் கூறினார்.

மேலும் செய்திகள்