மீண்டும் திகில் படத்தில் அனுஷ்கா

அனுஷ்கா ஏற்கனவே திகில் படங்களில் நடித்துள்ளார். அருந்ததியில் தீய அமானுஷ்ய சக்திகளுடன் ஆக்ரோ‌ஷமாக மோதினார்.

Update: 2018-08-26 23:30 GMT
அருந்ததி படம் தமிழ், தெலுங்கில் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்தியது. ‘பாக்மதி’ திகில் படத்திலும் திறமையை வெளிப்படுத்தினார். பாகுபலி, ருத்ரமாதேவி ஆகிய சரித்திர கதையிலும் ஓம் நமோ வெங்கடேசாயா என்ற புராண படத்திலும் அவரது நடிப்பு பேசப்பட்டது.  பாக்மதி படத்துக்கு பிறகு படங்களில் நடிக்காமல் இருந்தார். கோவில்களுக்கு சென்று விசே‌ஷ பூஜைகள் செய்து வந்தார். அவருக்கு பெற்றோர்கள் திருமண ஏற்பாடு செய்வதாகவும், ஜாதகத்தில் தோ‌ஷம் இருப்பதால் அது நீங்குவதற்காக கோவில்களுக்கு சென்று வருகிறார் என்றும் பேசப்பட்டது.

பாகுபலியில் ஜோடியாக நடித்த பிரபாசுடன் அனுஷ்காவுக்கு காதல் மலர்ந்துள்ளது என்றும் கிசுகிசுக்கள் வந்தன. இஞ்சி இடுப்பழகி படத்துக்கு பிறகு அவரது உடல் எடை கூடியதால் இப்போது பட வாய்ப்புகள் குறைந்து விட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் ‘சைலன்ட்’ என்ற திகில் படத்தில் நடிக்க அனுஷ்காவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.  கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த படத்தை எடுக்கின்றனர். அதனால் இதில் நடிக்க அனுஷ்கா சம்மதித்து உள்ளார். இதில் கதாநாயகனாக மாதவன் நடிக்கிறார். கோனா வெங்கட் இயக்குகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கில் தயாராகிறது.

மேலும் செய்திகள்