நடிகை சுவாதி காதல் திருமணம் விமான ‘பைலட்’டை மணந்தார்

நடிகை சுவாதி–விகாஸ் திருமணம் 30–ந் தேதி ஐதராபாத்தில் நடந்தது. வரவேற்பு நிகழ்ச்சி இன்று கொச்சியில் நடக்கிறது.

Update: 2018-09-01 22:30 GMT
தெலுங்கு டெலிவி‌ஷன்களில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த சுவாதி தமிழில், ‘சுப்பிரமணியபுரம்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தில், ‘‘கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுத்தாய்’’ என்ற பாடலில் அவர் விழிகளால் காதல் பேசி நடித்திருந்த காட்சிகள் பேசப்பட்டன. இந்த படத்துக்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான விருதும் கிடைத்தது.

கனிமொழி, போராளி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வடகறி, யட்சன், யாக்கை ஆகிய படங்களிலும் சுவாதி நடித்துள்ளார். தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். தெலுங்கில் 3 படங்களில் பாடியும் இருக்கிறார். மலையாள படங்களிலும் நடித்துள்ள அவர், ஐதராபாத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். 

சுவாதிக்கு இந்த வருடம் ஒரு படம் கூட இல்லை. புதுமுக கதாநாயகிகள் அதிகம் வந்ததால் போட்டி ஏற்பட்டு, அவருக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போனது. இதனால் சுவாதிக்கு விரைவில் திருமணத்தை முடிக்க பெற்றோர்கள் அவசரப்பட்டனர். இந்த நிலையில், மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் விமானியாக பணியாற்றும் விகாஸ் என்பவருக்கும், சுவாதிக்கும் நட்பு ஏற்பட்டு காதலாக மலர்ந்தது. 

இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பினார்கள். இருவரின் பெற்றோர்களும் திருமணத்துக்கு சம்மதித்தனர். இதைத்தொடர்ந்து சுவாதி–விகாஸ் திருமணம் கடந்த 30–ந் தேதி ஐதராபாத்தில் நடந்தது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொச்சியில் நடக்கிறது. 

விகாஸ்  இந்தோனேசியாவில்  உள்ள   ஜகர்த்தாவில் வசிக்கிறார்.  திருமணத்துக்கு பிறகு சுவாதி கணவருடன் ஜகர்த்தாவில் குடியேறுகிறார்.

மேலும் செய்திகள்