40 வயது நடிகைகளுக்கு அக்காள், அண்ணி வேடங்களா? –பூமிகா சீறுகிறார்

நடிகைகளுக்கு 40 வயது ஆகிவிட்டாலே அக்காள், அண்ணி, அம்மா வேடங்களுக்கு அழைப்பதை நடிகை பூமிகா கண்டித்துள்ளார்.

Update: 2018-09-11 22:00 GMT
தமிழில் சில்லுனு ஒரு காதல், ரோஜா கூட்டம், பத்ரி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பூமிகா. தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். இவர் 2007–ல் யோகா பயிற்சியாளர் பரத் தாகூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. திருமணத்துக்கு பிறகு ஒதுங்கி இருந்த பூமிகா நீண்ட இடைவெளிக்குப்பிறகு ‘யூடர்ன்’ படத்தில் நடித்துள்ளார்.

 பூமிகாவுக்கு இப்போது 40 வயது ஆகிறது. தனது வயது கதாநாயகிகளை அக்காள், அண்ணி வேடங்களுக்கு அழைப்பதாக பூமிகா கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:–

‘‘யூடர்ன் படத்தில் எனது கதாபாத்திரம் மனதுக்கு பிடித்து இருந்தது. இதுவரை இப்படி ஒரு வேடத்தில் நடிக்கவில்லை. இதுபோன்ற வித்தியாசமான கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிப்பேன். நடிகைகளுக்கு 40 வயது ஆகிவிட்டாலே அக்காள், அண்ணி, அம்மா வேடங்களில் நடிக்க அழைக்கிறார்கள். இது வேதனையாக உள்ளது. 

40 வயது ஆனதும் கதாநாயகிகளுக்கு தகுதி இல்லை என்று ஒதுக்க கூடாது. அந்த வயதிலும் நடிகைகள் இளமையாகவும் கவர்ச்சியாகவும் இருக்கிறார்கள். இந்தி நடிகை வித்யாபாலனுக்கு 40 வயதுக்கு மேலாகிறது. இந்த வயதிலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்கிறார். 

இதுபோல் இந்தி நடிகை மலைக்கா அரோராவும் 40 வயதை தாண்டியவர்தான். அவரும் கவர்ச்சியாக நடித்து வருகிறார். தென்னிந்திய படங்களில்தான் 40 வயது நடிகைகளை ஒதுக்கும் போக்கு இருக்கிறது. இந்தியை போல் இங்கும் மாற்றம் வரவேண்டும்.’’

இவ்வாறு பூமிகா கூறினார்.

மேலும் செய்திகள்