பார்வையற்ற சினிமா பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி திருமண நிச்சயதார்த்தம்

பார்வையற்ற சினிமா பின்னணி பாடகியான வைக்கம் விஜயலட்சுமிக்கும் பலகுரல் கலைஞர் அனூப் என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

Update: 2018-09-11 22:15 GMT
பார்வையற்ற சினிமா பின்னணி பாடகியான வைக்கம் விஜயலட்சுமி மலையாள பட உலகில் பிரபலமானவராக இருக்கிறார். வித்தியாசமான குரல் வளம் கொண்ட இவருக்கு அங்கு பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. பிருதிவிராஜ் நடித்த ஜே.சி.டேனியல் படத்தில் இடம்பெற்ற காற்றே காற்றே என்ற பாடலை பாடி தமிழ் பட உலகுக்கு வந்தார். 

விக்ரம் பிரபு நடித்த ‘வீர சிவாஜி’ படத்தில் பாடிய ‘சொப்பன சுந்தரி நான்தானே, நான் சொப்பன லோகத்தின் தேன்தானே’ பாடல் வைக்கம் விஜயலட்சுமியை மேலும் பிரபலப்படுத்தியது. ‘என்னமோ ஏதோ’ படத்தில் வரும் ‘புதிய உலகை புதிய உலகை’ உள்பட பல படங்களில் பாடி இருக்கிறார்.  வைக்கம் விஜயலட்சுமியின் வாழ்க்கை கதை சினிமா படமாகவும் தயாராகிறது. இந்த படத்தை விஜயகுமார் டைரக்டு செய்கிறார். இவரது வேடத்தில் மீன் விற்று படிக்கும் மாணவி ஹனன் ஹமீது நடிக்கிறார். விஜயலட்சுமிக்கும் சந்தோஷ் என்பவருக்கும் ஏற்கனவே திருமணம் நிச்சயமாகி நின்று போனது. இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். 

இந்த நிலையில் பலகுரல் கலைஞர் அனூப் என்பவருக்கும் விஜயலட்சுமிக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்தனர். இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் விஜயலட்சுமியின் வீட்டில் நடந்தது. நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டனர். விஜயலட்சுமி–அனூப் திருமணம் அடுத்த மாதம் (அக்டோபர்) 22–ந்தேதி வைக்கம் மகாதேவ கோவிலில் நடக்கிறது.

மேலும் செய்திகள்