மறைமலைநகர் அருகே அரசு பஸ்-கார் மோதல்; வாலிபர் பலி 3 பேர் படுகாயம்

மறைமலைநகர் அருகே அரசு பஸ்-கார் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.;

Update:2017-07-11 04:30 IST
தாம்பரம்,

சென்னையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி நேற்று முன்தினம் நள்ளிரவில் அரசு பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டு இருந்தது.
மறைமலைநகர் அருகே சென்ற போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் ஏறி எதிர் திசைக்கு பாய்ந்து சென்றது.

அப்போது செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த கார் மீது அரசு பஸ் பயங்கரமாக மோதியது. இதில் கார் மற்றும் அரசு பஸ்சின் முன்பகுதி நொறுங்கியது.

வாலிபர் பலி

இதில் காரில் இருந்த சென்னையை அடுத்த மடிப்பாக்கத்தைச் சேர்ந்த சரவணன்(வயது 27) என்பவர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். மேலும் அவருடன் காரில் பயணம் செய்த சிவராமகிருஷ்ணன் (40), சிவகுமார்(29), காசிராமன் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த மறைமலைநகர் போலீசார், படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 3 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மற்றொரு விபத்து

இதே போல நேற்று முன் தினம் நள்ளிரவில் மறைமலைநகர் ஜி.எஸ்.டி. சாலையில் அடுத்தடுத்து 2 அரசு பஸ்கள் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 2 பஸ்களிலும் இருந்த பயணிகள் காயம் ஏதும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

இந்த விபத்துகள் குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்