நலவாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு கட்டிடக்கலை தொழிலாளர்கள் போராட்டம்
கட்டுமான தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு கட்டிடக்கலை தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
புதுச்சேரி,
கட்டிட தொழிலாளர் நலவாரியத்தில் 2 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டிட தொழிலாளர்களை பதிவு செய்யாததை கண்டித்தும், புதிய விண்ணப்பங்கள் வழங்கக்கோரியும் புதுவை மாநில கட்டிட தொழிலாளர் சங்கத்தினர் பல்வேறுகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி தட்டாஞ்சாவடியில் உள்ள கட்டிட தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தை முற்றுகையிடப்போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று அவர்கள் கட்டிட தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இந்த போராட்டத்துக்கு சங்க மாநில தலைவர் விசுவநாதன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சந்திரசேகரன், பொருளாளர் வீரக்குமார், துணைத்தலைவர்கள் ஞானவேல், அரசப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் அலுவலக மெயின்கேட்டை தள்ளிவிட்டு உள்ளே புகுந்து நிர்வாகத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். இதைத்தொடர்ந்து வாரிய அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது புதிய உறுப்பினர்களை சேர்க்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து கட்டுமான தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.