6 ஆண்டுகளாக பூட்டிக்கிடக்கும் கட்டளை சிவன் கோவில் பக்தர்கள் வேதனை

கட்டளை சிவன் கோவில் 6 ஆண்டுகளாக பூட்டிக்கிடப்பதாக பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Update: 2018-07-12 22:30 GMT
கிருஷ்ணராயபுரம்,

ஆலயம் தொழுவது சாலமும் நன்று என்றார் அவ்வையார், கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது நமது முன்னோர் வாக்கு. ஆலயம் என்பது மனித ஆன்மா அமைதி பெற உதவும் இடம் என்றும், எங்கும் எதிலும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவன் தனது அருளை வெளிப்படுத்தும் இடமே கோவில் என்றும் கருதி நமது முன்னோர்களும், அரசர் களும், செல்வந்தர்களும் கலை அம்சத்துடன் எண்ணற்ற கோவில்களை கட்டி வழிபட்டதுடன் இல்லாமல் அவற்றின் பூஜைகள் தடையின்றி நடைபெறவும், உற்சவங்கள், திருவிழாக்கள் நடத்தவும் வருமானத்திற்காக பல ஏக்கர் நிலங்களையும் பொன், பொருட்களையும் வழங்கினர். அந்த வகையில் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் ரங்கநாதபுரம் ஊராட்சி கட்டளையில் புராதானமான வடிவ அமைப்புடன் சிவன் கோவில் ஒன்று சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.

இந்த கோவில் மூலவராக கைலாசநாதரும், தனிசன்னதியில் காமாட்சியம்மனும் உள்ளனர். மேலும் வள்ளி, தெய்வானை, வேல், மயில் ஆகியவைகளை ஒரே கல்லில் செதுக்கப்பட்ட ஆறுமுகங்களை கொண்ட முருகனும், விநாயகர், பைரவர், தட்சிணாமூர்த்தி, நவகிரகங்கள், நந்தி என தனிதனி தெய்வங்களும் உள்ளனர். தினந்தோறும் ஒருகால பூஜையும், பிரதோஷ நாட்களில் நந்திக்கு சிறப்பு பூஜையும், சிவராத்திரி நாட்களில் இரவு முழுவதும் பக்தர்கள் கூடி சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் இப்பகுதி பக்தர்கள் மற்றும் வெளியூரை சேர்ந்த பக்தர்களால் சிறப்புடன் நடத்தப்பட்டு வந்தன. இக்கோவிலின் பரம்பரை அறங்காவலர்களாக ஆதிமூர்த்தி குருக்கள் குடும்பத்தினர் இருந்து பூஜைகளையும், திருவிழாக்களையும் நடத்தி வந்தனர். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிமூர்த்தி குருக்கள் மறைந்தார். அவருக்கு ஆண் வாரிசுகள் இல்லாமையால் பெண் வாரிசு வகையில் பூஜைகள் செய்ய குருக்கள் வருவார்கள் என்று பக்தர்கள் எதிர்பார்த்த நிலையில் அவர்கள் ஏனோ இந்த பணி செய்ய கோவிலுக்கு வரவில்லை.

இந்து சமய அறநிலைய கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலின் பூஜைகள் நடத்த வேண்டி பக்தர்கள் அதிகாரிகளிடம் முறையிட்டும் அவர்களும் உரிய நடவடிக்கை மேற்கொண்டு புதிய குருக்கள் பணி அமர்த்தப்படாமையால் கடந்த 6 ஆண்டுகளாக ஒரு கால பூஜை கூட நடைபெறாமல் கோவில் பூட்டி கிடப்பது அப்பகுதி பக்தர்கள், ஆன்மிக வாதிகள், பொதுமக்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி வருகிறது. கோவிலுக்கு சொந்தமாக பல ஏக்கர் நிலங்கள் இருந்தும் அவற்றின் வருமானத்தை கொண்டும் இக்கோவிலை புனரமைத்து பூஜைகள் தொடர பல செல்வந்தர்களும், பக்தர்களும் நிதி உதவி அளிக்க தயாராக உள்ளதை பயன்படுத்தி இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு கோவிலை திறந்து பூஜைகள் நடத்த ஏற்பாடுகள் செய்ய வேண்டும். மேலும் சிதிலமடைந்துள்ள சில பகுதிகளை புனரமைக் கவும் ஆன்மிகவாதிகளும், பக்தர்களும், பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்