சொத்து தகராறில் விவசாயி அடித்துக்கொலை பெண் உள்பட 4 பேர் கைது

காரிமங்கலம் அருகே சொத்து தகராறில் விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-09-03 23:00 GMT
காரிமங்கலம்,

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள சென்னம்பட்டியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 67). இவருக்கு லோகநாதன் (46) மற்றும் மணி(40) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. கடந்த 1-ந்தேதி அண்ணன்-தம்பி 2 பேருக்கும் சொத்து பாகப்பிரிவினை நடைபெற்றது. அப்போது லோகநாதன் தனக்கு கூடுதலாக நிலம் ஒதுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு மணி சம்மதிக்கவில்லை. இதனால் லோகநாதன், மீண்டும் நிலத்தை அளக்க முயன்றுள்ளார்.

இதை அறிந்த மணி அங்கு சென்று நிலத்தை அளக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் லோகநாதன் மற்றும் அவரது 3 மகன்களுக்கும், மணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது லோகநாதனுக்கு ஆதரவாக அவரது சித்தப்பா சிங்காரவேலு மற்றும் அவரது மகன்களும் வந்து மணியிடம் தகராறு செய்துள்ளனர். மேலும் லோகநாதனின் உறவினர்களான சீங்கேரியை சேர்ந்த தங்கவேல், சீனிவாசன் ஆகியோரும் வந்து மணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையறிந்த மணியின் மற்றொரு சித்தப்பா விவசாயியான வடிவேல் (60), அங்கு வந்து, லோகநாதன் தரப்பினரை சமாதானம் செய்ய முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த தங்கவேல் (49), லோகநாதன்(46), இவரது மகன்கள் குருநாதன்(27), ராமன் (22), சிங்காரவேல் (59), இவரது மகன்கள் செந்தில்குமார்(40), சிவக்குமார்(39), லோகநாதனின் மனைவி ஜெயராணி (38) மற்றும் லட்சுமணன் (22), சீனிவாசன் (47) ஆகிய 10 பேர் சேர்ந்து வடிவேலை உருட்டு கட்டைகளால் சரமாரியாக தாக்கினர்.இதில் படுகாயம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நேற்று சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே வடிவேல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் காரிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் போலீசார் லோகநாதன் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதுதொடர்பாக தங்கவேல், சிவக்குமார், லோகநாதனின் மனைவி ஜெயராணி, சீனிவாசன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 6 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். சொத்து தகராறில் விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்