கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வராததை கண்டித்து பேராவூரணியில் கடையடைப்பு-சாலைமறியல்

கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வராததை கண்டித்து பட்டுக்கோட்டை, பேராவூரணியில் கடையடைப்பு, சாலைமறியல் போராட்டம் நடந்தது. இதனைத்தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் வருகிற 25-ந் தேதிக்குள் முழு அளவு தண்ணீர் விடப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரி உறுதி அளித்தததால் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

Update: 2018-09-04 23:00 GMT
பட்டுக்கோட்டை,

தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் பாசனத்திற்காக கல்லணை கால்வாயில் இருந்து கடந்த ஜூலை மாதம் 22-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. தண்ணீர் திறந்து விடப்பட்டு 44 நாட்களாகியும் பட்டுக்கோட்டை பகுதி கடைமடை பாசனத்திற்கு இன்னும் தண்ணீர் வரவில்லை. இதைக் கண்டித்து அனைத்துக் கட்சி சார்பில் பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மதுக்கூர் பகுதிகளில் கடையடைப்பும், சாலை மறியல் போராட்டமும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி நேற்று காலை பட்டுக்கோட்டை பஸ் நிலையம், பெரிய தெரு, சன்னதி தெரு, பெரிய கடை வீதி, மார்க்கெட், அறந்தாங்கி ரோடு முக்கம், தஞ்சை ரோடு உள்ளிட்ட நகர் முழுவதும் நகைக்கடைகள், மளிகை கடைகள், ஜவுளிக்கடைகள் உள்பட அனைத்து கடை களும் அடைக்கப்பட்டு இருந்தன. பட்டுக்கோட்டை தொகுதி முழுவதுமே அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.

பட்டுக்கோட்டை போலீஸ் நிலையம் முன்பாக பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் சாலை மறியலுக்காக காலை 9 மணியில் இருந்தே குவிந்தனர். போராட்டக்குழுவினரோடு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பொதுப்பணித்துறை நிர்வாக பொறியாளர் முருகேசன் வந்தார். அவருடன் போலீஸ் கூடுதல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் செங்கமலக்கண்ணன்(பட்டுக்கோட்டை), செல்வராஜ்(பாபநாசம்) ஆகியோரும் உடன் இருந்தனர்.

பட்டுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் நடந்த பேச்சு வார்த்தையில் போராட்டக்குழு சார்பில் முன்னாள் எம்.எல்.ஏக்கள் .அண்ணாதுரை, ஏனாதி பாலு, நசுவினி ஆறு அணை பாசன விவசாயிகள் சங்க தலைவர் வீரசேனன் மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.

அப்போது கல்லணைக் கால்வாய் நிர்வாகப் பொறியாளர் முருகேசன், தற்போது பட்டுக்கோட்டை தாலுகா பாசன பகுதிக்கு தம்பிக்கோட்டை வடகாடு வாய்க்கால், கல்யாணஓடை வாய்க்கால், ராஜாமடம் வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. வருகிற 25-ந் தேதிக்குள் இந்த பகுதியில் உள்ள வாய்க்கால்களில் முழு அளவு முறை வைக்காமல் தண்ணீர் விடப்பட்டு ஏரி, குளங்கள் நிரப்பப்படும். காவல் துறை, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை இணைந்து கண்காணிப்புக் குழு அமைக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

போராட்டக்குழுவினர் சார்பில் 25-ந் தேதிக்குள் முறை வைக்காமல் வாய்க்கால் களில் முழு அளவு தண்ணீர் விட்டு ஏரி, குளங்களை நிரப்பித்தர வேண்டும். இல்லையெனில் எங்களது அடுத்த கட்ட போராட்டம் தஞ்சையை(கலெக்டர் அலுவலகம்) நோக்கித்தான் இருக்கும் என்று கூறினர்.

பேச்சுவார்த்தை முடிந்து போலீஸ் நிலையத்தை விட்டு அனைவரும் வெளியே வந்த பிறகு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தேசியக்குழு உறுப்பினர் மகேந்திரன் தலைமையில் திடீர் என்று பஸ் நிலையம் முன்பு ரோட்டில் உட்கார்ந்து மறியல் செய்தனர்.

அப்ே-புாது முன்னாள் எம்.எல்.ஏ அண்ணாதுரை அங்கு வந்து பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டு விட்டதால் இப்போது மறியல் வேண்டாம் என்றார். இதனைத்தொடர்ந்து மகேந்திரனும் மற்றவர்களும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதைத் தொடர்ந்து பட்டுக்கோட்டையில் உள்ள அனைத்துக் கடைகளும் பகல் 1 மணி அளவில் மீண்டும் திறக்கப்பட்டன.

இதே கோரிக்கையை வலியுறுத்தி பேராவூரணியில் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ. சிங்காரம் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., திராவிடர் கழகம், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக மக்கள் புரட்சி கழகம் மற்றும் வர்த்தகர் சங்கத்தினர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேராவூரணி தாசில்தார் பாஸ்கரன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் முருகேசன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வருகிற 25-ந் தேதிக்குள் கடைமடை பகுதிக்கு முழுமையாக தண்ணீரை கொண்டு வந்து விடுவோம் என அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டத்தையொட்டி பேராவூரணியில் 600-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மறியல் காரணமாக பேராவூரணி-பட்டுக்கோட்டை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்