போலி ஆவணங்கள் மூலம் ரூ.50 கோடி மதிப்புள்ள நிலத்தை விற்ற மதுரை செல்லத்தம்மன் கோவில் பூசாரிகள் 6 பேர் பணி நீக்கம்

போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.50 கோடி நிலத்தை விற்பனை செய்த மதுரை செல்லத்தம்மன் கோவில் பூசாரிகள் 6 பேரை பணி நீக்கம் செய்து மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Update: 2018-09-04 22:45 GMT

மதுரை,

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

மதுரை எல்லீஸ்நகர் 70 அடி ரோட்டில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலின் உப கோவிலான சிம்மக்கல் செல்லத்தமன் கோவிலுக்கு 2 ஏக்கர் 4 சென்ட் நிலம் நன்கொடையாக வழங்கப்பட்டு இருந்தது. அந்த நிலத்தின் மொத்த மதிப்பு சுமார் ரூ,50 கோடி ஆகும். அந்த நிலம் தங்களுக்கு சொந்தமானது என செல்லத்தம்மன் கோவில் பூசாரிகள் மற்றும் வெளிநபர்கள் உள்ளிட்ட 12 பேர் கோவிலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர். அப்போது நிலம் கோவிலுக்கு சொந்தமானது என்று தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அந்த மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்து, அந்த நிலத்திற்கு கோவில் பெயரில் பட்டா வழங்கப்பட வேண்டும் என தீர்ப்பாய ஆணையை உறுதி செய்து கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. இதற்கிடையில் அந்த நிலம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் எல்லீஸ்நகர் குடியிருப்பு திட்டத்திற்கு நில ஆர்ஜிதம் செய்து எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது நிலத்திற்கு வழங்கும் ஈட்டு தொகையை தங்களுக்கு வழங்க வேண்டுமென்று செல்லத்தம்மன் கோவில் பூசாரிகள் 6 பேர் மீண்டும் வழக்கு தொடர்ந்தனர். அதில் நில ஆர்ஜித தொகையில் கோவிலுக்கு உரிமை உள்ளது என தீர்ப்பு வந்தது.

மேலும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு திட்டத்திற்கு நில ஆர்ஜிதம் செய்து எடுத்துக் கொள்ளப்பட்ட கோவில் நிலம் எவ்வித பயன்பாடுமின்றி இருந்தது. எனவே அந்த நிலத்தை மீண்டும் கோவிலுக்கு வழங்குமாறு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திடம் கேட்கப்பட்டது. அதை தொடர்ந்து நிலம் ஆர்ஜிதம் செய்வது நிறுத்தப்பட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் செல்லத்தம்மன் கோவில் பூசாரிகளான லோகேந்திரன், ஆறுமுகம், காசிவிஸ்வநாதன், கிருஷ்ணமூர்த்தி, யுவராஜ், விஸ்வநாதன் ஆகியோர் கோவிலுக்கு சாதமாக வழங்கிய தீர்ப்புகள் அனைத்தையும் மறைத்து, அந்த நிலம் தங்களது குடும்பத்திற்கு சொந்தமான நிலம் என்று கூறி விஸ்வநாதபிள்ளை பெயரில் போலி பட்டா பெற்றனர்.

மேலும் கோவில் நிர்வாகத்திற்கு தெரியாமல் போலி ஆவணங்கள் ஏற்படுத்தி அந்த நிலத்தை விற்க ஏற்பாடு செய்தது கோவில் நிர்வாகத்திற்கு தெரியவந்தது. பின்பு 50 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த நிலத்தை 2 கோடியே 10 லட்சத்திற்கு விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்டது கோவில் சார்பில் கண்டறியப்பட்டது.

அதன்படி இந்த மோசடியில் ஈடுபட்ட செல்லத்தம்மன் கோவில் பூசாரிகள் 6 பேர் மீது கோவில் நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு கடந்த 2017–ம் ஆணடு தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் அந்த நிலத்தில் பூசாரிகளின் ஆதரவாளர்கள் சிலர் ஆக்கிரமித்து இருந்து வந்தனர். அவர்களையும் கோவில் நிர்வாகம் கடந்த மாதம் போலீசார் மூலம் வெளியேற்றியது.

மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான சொத்தை போலி ஆவணங்கள் தயார் செய்து விற்பனை செய்த செல்லத்தம்மன் கோவில் பூசாரிகள் 6 பேர் மீது இணை கமி‌ஷனர் மூலம் விசாரணை நடத்தப்பட்டது. அதில் குற்றச்சாட்டு அனைத்தும் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட செல்லத்தம்மன் கோவில் பூசாரிகள் லோகேந்திரன், ஆறுமுகம், காசிவிஸ்வநாதன், கிருஷ்ணமூர்த்தி, யுவராஜ், விஸ்வநாதன் ஆகியோர் பூசாரி பணியில் இருந்து நிரந்தரமாக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்