ஊதியூர் அருகே கிரானைட் குவாரியில் வெடி வைப்பதால் வீடுகள் சேதம், தாசில்தாரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு

காங்கேயம் தாலுகா ஊதியூரை அடுத்த நிழலி அருகே கிரானைட் குவாரியில் வெடி வைப்பதால் அருகில் வீடுகள் சேதமடைவதாக கூறி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தாசில்தாரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

Update: 2018-09-04 22:30 GMT

காங்கேயம்,

ஊதியூரை அடுத்துள்ள நிழலி அருகே குடியிருப்புகளுக்கு அருகில் செயல்படும் கிரானைட் குவாரியில் அதிக சத்தத்துடன் வெடிகள் வைத்து வெடிக்கப்படுவதால் அருகில் உள்ள வீடுகள் மற்றும் பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாவதாகவும் எனவே குவாரி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தாசில்தார் மகேஸ்வரன் மனு கொடுத்தனர்.

அதில் கூறி இருப்பதாவது:–

காங்கேயம் தாலுகா எல்லப்பாளையம்புதூர் ஊராட்சிக்குட்பட்ட நிழலி அருகே குடியிருப்பு பகுதிக்கு அருகில் உள்ள இடத்தில் அதிக அளவில் வெடி மருந்துகளை பயன்படுத்தி கிரானைட் கற்களை வெட்டி எடுத்து வருகிறார்கள். இங்கு வைக்கப்படும் சக்திவாய்ந்த வெடிகளின் காரணமாக இங்குள்ள வீடுகளில் விரிசல் விழுவதோடு, பொதுமக்களும், கால்நடைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுவருகின்றன. மேலும் இரவு நேரங்களில் சக்திவாய்ந்த வெடிகள் வெடிப்பதோடு குடியிருப்புகளுக்கு அருகில் 100 அடி உயரத்திற்கு கற்களையும் கொட்டி வைத்துள்ளனர்.

இந்த குவாரியில் வெடிபொருட்கள் வெடிக்கும் போது கற்கள் சிதறி இப்பகுதி பொதுமக்கள் மீதும், ஆடு, மாடுகள் மீதும் குழந்தைகள் மீதும் விழுவதால் மிகுந்த அச்சத்துடனேயே வசித்து வருகிறோம். எனவே அதிக சத்தத்துடன் வெடி வைக்கப்படும் இந்த கிரானைட் குவாரியில் உரிய முறையில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார் மகேஸ்வரன் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

மேலும் செய்திகள்