மனைவி– அண்ணனை கொன்றவர் வீடு தேடி வந்து மற்றொரு அண்ணனையும் கொல்ல முயற்சி

வில்லியனூர் அருகே மனைவி– அண்ணனை கொன்றவர் மற்றொரு அண்ணனையும் கொலை செய்வதற்காக கூட்டாளியுடன் வீடு தேடி வந்தார். இதை கண்ட பொதுமக்கள் அவர்கள் இருவரையும் கட்டி வைத்து உதைத்தனர்.

Update: 2018-09-05 00:00 GMT

வில்லியனூர்,

புதுவை மாநிலம் வில்லியனூர் அருகே உள்ள பிள்ளையார்குப்பம் புதுநகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன்கள் குமார், சங்கர், ராஜேந்திரன்(வயது 36). இவர்கள் அனைவருக்கும் திருமணம் முடிந்து தனித்தனியாக வசித்து வருகிறார்கள். ராஜேந்திரன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மயூரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

இந்த நிலையில் ராஜேந்திரனுக்கு மதுகுடிக்கும் பழக்கமும், கஞ்சா பழக்கமும் உண்டு. இவற்றை பயன்படுத்தும் போது அவர் சைக்கோ மனிதன் போல் நடந்து கொள்வார். இந்த நிலையில் கடந்த ஆண்டு ஏப்ரல் 3–ந்தேதி கஞ்சா போதையில் இருந்த ராஜேந்திரன் தனது மனைவி மயூரியை மண்வெட்டியால் வெட்டியும், கடப்பாரையால் குத்தியும் கொலை செய்தார். அவரை போலீசார் கைது செய்து காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். பின்னர் அவரது அண்ணன்கள், குமார், சங்கர் ஆகியோரின் முயற்சியால் ராஜேந்திரன் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்த நிலையில் ராஜேந்திரன் மீண்டும் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானார். போதையில் இருக்கும் போது அண்ணன்கள் குமார், சங்கர் ஆகியோரை கொலை செய்யப்போவதாக மிரட்டி வந்தார். அப்போது அவர் ஏதோ போதையில் உளறுகிறான் என்று நினைத்து கொண்டனர். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 3ந்தேதி அன்று ராஜேந்திரனின் மனைவி மயூரியின் ஓராண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அன்றைய தினம் ராஜேந்திரன் தனது அண்ணன் குமாருடன் பேச வேண்டும் என்று கூடப்பாக்கம் சவுக்கு தோப்புக்கு அழைத்தார். உடனே குமாரும் அங்கு சென்றார். அப்போது ராஜேந்திரன் நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து குமாரை வெட்டிக்கொலை செய்தார்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட ராஜேந்திரன் மீண்டும் காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே அவரது கூட்டாளிகள் ராஜேந்திரனை மீண்டும் ஜாமீனில் எடுத்தனர். தினந்தோறும் அவர் வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் நிபந்தனை விதிக்கப்பட்டு இருந்தது. இதற்காக அவர் கணுவாப்பேட்டையில் தங்கி இருந்து வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார்.

இந்த நிலையில் ராஜேந்திரன் அவனது கூட்டாளி ஒருவருடன் நேற்று முன்தினம் இரவு திடீரென பிள்ளையார்குப்பத்துக்கு வந்தார். இவர்கள் இருவரும் ஏற்கனவே கொலை செய்யப்பட்ட குமாரின் வீட்டுக்கு சென்றனர். இதை பார்த்த அவரது குடும்பத்தினர் கதவை பூட்டிக்கொண்டனர். இதனால் அவர்கள் அங்கு தகராறில் ஈடுபட்டனர்.

சிறிது நேரத்தில் அவர்கள் 2 பேரும் மற்றொரு அண்ணன் சங்கர் வீட்டுக்கு சென்றனர். அவர்கள் சங்கரை கொலை செய்யும் நோக்கத்துடன் வீட்டுக்குள் நுழைந்தனர். இதனை பார்த்த உடன் அவரது குடும்பத்தினர் ராஜேந்திரன் மற்றும் அவனது கூட்டாளியை வீட்டை விட்டு வெளியே தள்ளி கதவை மூடினர்.

இதனால் அவர்கள் கொலை வெறியுடன் கதவை உடைத்தனர். அப்போது சங்கர் குடும்பத்தினர் தங்களை காப்பாற்றுங்கள்...காப்பாற்றுங்கள்... என்று அலறினார்கள். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி பொதுமக்கள் திரண்டனர். அவர்கள் ராஜேந்திரன் மற்றும் அவனது கூட்டாளியை மடக்கி பிடித்து கை–கால்களை கட்டி உதைத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் 2 பேரும் உங்கள் அனைவரையும் கொலை செய்யாமல் விடமாட்டேன் எச்சரித்தனர்.

இந்த சம்பவம் குறித்து வில்லியனூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து ராஜேந்திரன் மற்றும் அவனது கூட்டாளியை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்