மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபர் கைது 23 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

சீர்காழியில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து 23 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

Update: 2018-09-04 22:30 GMT
சீர்காழி,

சீர்காழி அருகே சட்டநாதபுரம் கைகாட்டியில் நேற்று முன்தினம் சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சீர்காழியை நோக்கி வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணான பேசி உள்ளார். இதனால் அவர் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரை சீர்காழி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் நாகை மாவட்டம் சீர்காழி அருகே பெருந்தோட்டம் கிராமம் மெய்யன்நகரை சேர்ந்த சாமித்துரை மகன் சுந்தர் என்ற பாலசுந்தர் (வயது 23) என்பதும், இவர் சீர்காழி, கொள்ளிடம், பூம்புகார், பொறையார் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள்கள் திருடியதும் தெரிய வந்தது.

இதையடுத்து சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 23 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்