உடல்தகுதி தேர்வின்போது 4 பெண்கள் மயங்கி விழுந்தனர்

திண்டுக்கல் ஆயுதப்படை மைதானத்தில் நடந்த போலீஸ் உடல்தகுதி தேர்வின்போது 4 பெண்கள் மயங்கி விழுந்தனர்.

Update: 2018-09-04 22:00 GMT

திண்டுக்கல்,

போலீஸ் பணிக்கான எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, தற்போது தமிழகம் முழுவதும் உடல்தகுதி தேர்வு நடந்து வருகிறது. திண்டுக்கல், தேனி மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு, திண்டுக்கல் ஆயுதப்படை மைதானத்தில் நேற்று முன்தினம் முதல் உடல்தகுதி தேர்வு நடைபெற்று வருகிறது. அதன்படி முதல்நாள் இரு மாவட்டங்களையும் சேர்ந்த 1,000 பேர் அழைக்கப்பட்டு இருந்ததில், 709 பேர் கலந்துகொண்டனர்.

இதையடுத்து நேற்று 540 பெண்கள் மற்றும் 631 ஆண்கள் உடல்தகுதி தேர்வுக்கு அழைக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் அனைவரும் இந்த தேர்வில் பங்கேற்றனர். முதலில் காலை 5 மணிக்கு பெண்களுக்கான உடல்தகுதி தேர்வு தொடங்கியது. அதில் உயரம் அளத்தல், 1,500 மீட்டர் ஓட்டம் ஆகியவை நடந்தது.

உடல்தகுதி தேர்வு நடந்து கொண்டு இருந்தபோது 4 பெண்கள் திடீரென மயங்கி விழுந்தனர். அவர்களுக்கு மைதானத்தில் தயாராக இருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். பரிசோதனையில் காலை உணவு சாப்பிடாததால், உடல்சோர்வு ஏற்பட்டு அவர்கள் மயங்கி விழுந்தது தெரியவந்தது. முடிவில் 238 பெண்கள் உடல்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றனர்.

இதையடுத்து நடந்த ஆண்களுக்கான உடல்தகுதி தேர்வில் 402 பேர் தேர்ச்சி பெற்றனர். கடந்த 2 நாட்களாக நடந்த உடல்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இன்றும் (புதன்கிழமை), நாளையும் (வியாழக்கிழமை) 2–ம்கட்ட உடல்தகுதி தேர்வு நடைபெறுகிறது. அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு வருகிற 7–ந்தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது. உடல்தகுதி தேர்வை திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. ஜோஷி நிர்மல்குமார், போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் ஆகியோர் பார்வையிட்டனர்.

மேலும் செய்திகள்