2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தற்கொலைக்கு முயன்ற தாய்

நாமக்கல்லில் 2 குழந்தைகளுக்கு சாப்பாட்டில் விஷம் கலந்து கொடுத்து விட்டு, தானும் தற்கொலைக்கு முயன்ற தாயாரால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இவர்கள் 3 பேரும் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Update: 2018-09-04 22:34 GMT
நாமக்கல், 


நாமக்கல் நகரில் திருச்சி சாலை ஆண்டவர்நகரை சேர்ந்தவர் சரவணன். ரிக் வண்டி தொழிலாளி. இவரும், சசிகலா (வயது29) என்ற பெண்ணும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
தற்போது இவர்களுக்கு அனிஷா (8) என்ற மகளும், தனிஷ் (7) என்ற மகனும் உள்ளனர். இவர்கள் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் முறையே 2 மற்றும் 1-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை கணவன்-மனைவி இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த சசிகலா சாப்பாட்டில் விஷம் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து விட்டு அவரும் சாப்பிட்டதாக கூறப்படுகிறது.
உயிருக்கு போராடிய 3 பேரையும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் 3 பேரும் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்