வியாபாரிகளுடன் குமாரசாமி காணொலிக்காட்சி மூலம் கலந்துரையாடல்

யஷ்வந்தபுரம் தக்காளி மார்க்கெட் வியாபாரிகளுடன் குமாரசாமி காணொலிக்காட்சி மூலம் கலந்துரையாடல் நடத்தினார்.

Update: 2018-09-04 23:51 GMT
பெங்களூரு,

வியாபாரிகளுக்காக தினசரி கடன் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும் என்று குமாரசாமி உறுதி அளித்தார்.

கர்நாடக கூட்டுறவுத்துறை மந்திரி பண்டப்பா காசம்பூர் நேற்று பெங்களூரு யஷ்வந்தபுரத்தில் தக்காளி மார்க்கெட்டுக்கு சென்று வியாபாரிகளின் குறைகளை கேட்டார். கந்துவட்டிக்கு தடை விதிக்கும் விதத்தில் ஏழைகளின் தோழன் என்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக அவர் கூறினார்.

அங்கிருந்த வியாபாரி களுடன் காணொலிக்காட்சி மூலம் முதல்-மந்திரி குமாரசாமி கலந்துரை யாடினார். அப்போது வியாபாரிகள் தங்களின் குறைகளை எடுத்துக் கூறினர். அதில் பேசிய குமாரசாமி, “தெருவோர வியாபாரிகளுக்கு உதவும் நோக்கத்தில் ஏழைகளின் தோழன் என்ற தினசரி கடன் திட்டத்தை செயல்படுத்த அரசு ஆலோசித்து வருகிறது. கூட்டுறவு வங்கிகள் மூலம் இந்த தினசரி கடன் திட்டம் அமல்படுத்தப்படும்” என்றார்.

வியாபாரிகளின் பிரச்சினைகளை கேட்டு அறிந்து அவற்றை அறிக்கையாக தயாரித்து தாக்கல் செய்யும்படி அதிகாரிகளுக்கு குமாரசாமி உத்தரவிட்டார். இந்த கலந்துரையாடலுக்கு பிறகு மந்திரி பண்டப்பா காசம்பூர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கர்நாடக அரசு ஏழைகளின் தோழன் என்ற பெயரில் தினசரி கடன் உதவி திட்டத்தை தொடங்குகிறது. இதன் மூலம் தெருவோர வியாபாரிகளுக்கு ஒரு நாள் கடன் வழங்கப்படும். காலையில் கடன் வழங்கி மாலையில் அந்த கடன் தொகை திரும்ப பெறப்படும். இதன் மூலம் கந்துவட்டி பிரச்சினை தடுக்கப்படும்.

இந்த திட்டத்திற்கான வரைவு அறிக்கையை தயாரித்துள்ளோம். வியாபாரிகளின் பிரச்சினைகள் என்ன என்பதை அறிய நான் இங்கு வந்தேன். வியாபாரிகளின் ஆலோசனைகளின் அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

இவ்வாறு பண்டப்பா காசம்பூர் கூறினார். 

மேலும் செய்திகள்