பட்டதாரி வாலிபர் உள்பட 2 பேர் பலி

வெவ்வேறு விபத்துகளில் பட்டதாரி வாலிபர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2018-09-04 21:30 GMT
ஆண்டிப்பட்டி, 


ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை புதூர் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 25). பட்டதாரியான இவர், வேலை தேடி கொண்டிருந்தார். நேற்று இவர் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக ஆண்டிப்பட்டிக்கு வந்து விட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் வைகை புதூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
ஆண்டிப்பட்டியை அடுத்துள்ள சீதாராம்தாஸ் நகர் அருகே வந்தபோது எதிரே சிமெண்டு ஏற்றிக்கொண்டு வந்த மினி லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கார்த்திக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலக்கோம்பையை சேர்ந்த மினி லாரி டிரைவர் ராஜேஷ் கண்ணா (30) என்பவரை கைது செய்தனர்.

கடமலைக்குண்டு அருகே உள்ள கரட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன். அவருடைய மகன் சவுந்தரபாண்டி(வயது 18). இவர் கரட்டுப்பட்டியில் உள்ள இருசக்கர வாகன ஒர்க்‌ஷாப்பில் ஊழியராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து, சவுந்தரபாண்டி மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
வெள்ளிமலை-தேனி சாலையில், மேகமலை வனச்சரக அலுவலகம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தூக்கி வீசப்பட்ட சவுந்தரபாண்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கடமலைக்குண்டு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் சவுந்தரபாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக க.விலக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்