சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு நவீன பெட்டிகளுடன் இயக்கப்பட்ட பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில்

சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு நவீன ரக பெட்டிகளுடன் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2018-09-05 22:00 GMT

செங்கோட்டை,

சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு நவீன ரக பெட்டிகளுடன் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில்

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து சென்னை எழும்பூருக்கு தினமும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் இருமார்க்கத்திலும் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் தென்காசி, சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை வழியாக இயக்கப்படுகிறது.

இந்த ரெயிலை நெல்லை மாவட்ட மக்கள் மட்டுமின்றி கேரள மாநில மக்களும் அதிகம் நம்பி உள்ளனர். செங்கோட்டையில் இருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் மட்டுமே தினமும் சென்னைக்கு இயக்கப்படுவதால் இந்த ரெயிலில் எப்போதும் கூட்டம் அதிகமாக காணப்படும். சனி, ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் தொடர் விடுமுறை நாட்கள், பண்டிகை காலங்களில் இந்த ரெயிலுக்கு முன்பதிவு டிக்கெட் கிடைப்பது மிகவும் சிரமம். முன்பதிவு இல்லாத பெட்டிகளிலும் கூட்டம் நிரம்பி காணப்படும். 108 பேர் பயணம் செய்யக்கூடிய முன்பதிவில்லா பெட்டிகளில் 200 பேர் பயணம் செய்யும் அவலநிலையும் உள்ளது.

இந்த நிலையில் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் அதிநவீன வசதிகளுடன் கூடுதல் சிறப்பு அம்சங்கள் கொண்ட எல்.எச்.பி. நவீன பெட்டிகள் கொண்டு இயக்கப்படும் என்று ரெயில்வே துறை அறிவித்தது. அதன்படி நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. 23 நவீன எல்.எச்.பி. பெட்டிகளுடன் இயக்கப்பட்டது. நேற்று காலை இந்த ரெயில் செங்கோட்டை ரெயில் நிலையத்திற்கு வந்தது. அதில் ஏராளமான பயணிகள் வந்து இறங்கினார்கள்.

வரவேற்பு பெறும்

இதுகுறித்து ரெயிலில் பயணம் செய்த பயணிகள் கூறுகையில், “ பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நவீன வசதிகளுடன் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதனால் பயணத்தின் போது தண்டவாளத்தில் காணப்படும் அதிர்வுகள் மிக குறைவாகவே இருப்பதால் சுகமான பயணத்தை உணர முடிந்தது. பெட்டிகளில் விசாலமான ஜன்னல்கள், செல்போன் சார்ஜர் போடும் வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன. நீண்ட தூரம் இயக்கப்படும் ரெயில்களில் மட்டுமே இந்த மாதிரியான நவீன பெட்டிகள் இணைக்கப்படும். ஆனால் தற்போது, தமிழகத்தில் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நவீன பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படுவதால் நாங்கள் நிம்மதி அடைந்துள்ளோம். இந்த ரெயிலில் பயணம் செய்வது மகிழ்ச்சியை தருகிறது. இந்த ரெயில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும்“ என்றனர்.

மேலும் செய்திகள்