வடக்கன்குளம், உவரி பகுதிகளில் சுனாமி மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி

வடக்கன்குளம், உவரி பகுதிகளில் சுனாமி மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2018-09-05 21:30 GMT

வடக்கன்குளம்,

வடக்கன்குளம், உவரி பகுதிகளில் சுனாமி மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

சுனாமி ஒத்திகை

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா கூட்டபுளி மீனவ கிராமத்தில் சுனாமி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. பயிற்சியை சேரன்மாதேவி உதவி கலெக்டர் ஆகாஷ் தொடங்கி வைத்தார். காலை 8 மணிக்கு சுனாமி உருவாகி இருப்பதால் பொதுமக்கள் அனைவரும் தங்கள் உடைமைகளை எடுத்துக்கொண்டு பாதுகாப்பான இடத்திற்கு செல்லவும் என்று போலீசார் வாகனத்தில் ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை வழங்கினர். ஒரு மணி நேரம் கழித்து சுனாமி வந்து கடற்கரை பகுதியை தாக்குவதாகவும், அதில் காயம் அடைந்தவர்களையும், தப்பித்த பொதுமக்களையும், மீன்வளத்துறையினர், வருவாய் துறை, தீயணைப்பு படையினர், தேசிய பேரிடர் மீட்டு குழுவினர், போலீசார், மருத்துவ துறையினர் உள்பட பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் எப்படி மீட்டு பாதுகாப்பாக வெளியேற்றினர் என்பது போன்ற சுனாமி மாதிரி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

இதுகுறித்து உதவி கலெக்டர் ஆகாஷ் கூறுகையில், சுனாமி வந்தால் மக்கள் தங்களையும், உடைமைகளையும் எப்படி காப்பாற்ற வேண்டும், எப்படி முதலுதவி செய்ய வேண்டும், உபகரணங்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பன போன்ற பயிற்சிகளை கூட்டபுளி கிராம மக்களுக்கு வழங்கி உள்ளோம் என்றார். இந்த பயிற்சி ராதாபுரம் தாசில்தார் முகமது புகாரி தலைமையில் நடந்தது. இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

உவரி

இதேபோல் உவரி அருகே உள்ள கூட்டப்பனை கிராமத்திலும் ஐதராபாத்தில் உள்ள இந்திய பெருங்கடல் முன்னறிவிப்பு அமைப்பு சார்பில், சுனாமி மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திசையன்விளை தாசில்தார் தாஸ்பிரியன், துணை தாசில்தார் கணேஷ், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மகாலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்