திருவள்ளூர் மாவட்டத்தில் 2¾ லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி கலெக்டர் தகவல்

திருவள்ளூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 80 ஆயிரத்து 350 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட 75 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்தார்.

Update: 2018-09-05 22:30 GMT

ஊத்துக்கோட்டை,

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே பூண்டி ஒன்றியத்தில் உள்ள மோவூரில் கால்நடைகளுக்கான 15–வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் முகாமை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:–

தமிழக அரசு கால்நடை பராமரிப்புத்துறை மூலமாக 6 மாததுக்கு ஒருமுறை கோமாரி நோய் கட்டுப்பாடு திட்டத்தின் கீழ் பசு மற்றும் எருமைகளுக்கான தடுப்பூசி முகாம்களை நடத்தி வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் இதுவரை 14 சுற்று முகாம்கள் முடிந்து தற்போது 15–வது சுற்று முகாம் இந்த மாதம் 1–ந் தேதி தொடங்கியது. இது 21 நாட்களுக்கு நடைபெற உள்ளது. கோமாரி நோய் வைரஸ் கிருமிகளால் ஏற்படுவதாகும். இந்த நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு காய்ச்சல், வாயில் கொப்பளங்கள், எச்சில் வடிதல், பசியின்மை, உடல் மெலிதல், மடி காம்புகளில் கொப்பளங்கள், கால் நொண்டுதல், பால் உற்பத்தி குறைதல், சினை பிடிக்கும் தன்மை பாதிக்கப்படுதல், கருச்சிதைவு, மலட்டுத்தன்மை போன்றவை ஏற்படும். பாதிக்கபட்ட பசுக்களின் பாலை குடிக்கும் கன்றுகள் 3 மாதத்திற்குள் இறக்கும் அபாயம் உள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் 14 ஒன்றியங்களில் உள்ள 84 கால்நடை மருந்தகங்கள், 29 கால்நடை கிளை நிலையங்கள், 5 கால்நடை மருத்துவமனைகள் மூலமாக தடுப்பூசி முகாகள் நடைபெற உள்ளன. இந்த முகாம்களுக்காக கால்நடை உதவி மருத்துவர், கால்நடை ஆய்வாளர், கால்நடை பராமரிப்பு உதவியாளர் கொண்ட 75 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவினரால் 2 லட்சத்து 25 ஆயிரத்து 173 பசுக்கள், 55 ஆயிரத்து 177 எருமைகள் என மொத்தம் 2 லட்சத்து 80 ஆயிரத்து 350 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட உள்ளது.

கோமாரி நோய் தடுப்பூசி முகாம் குறித்து ஏற்கனவே நடைபெற்ற கிராமசபை கூட்டங்கள் மூலம் அறிவிக்கப்படுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கால்நடை வளர்போர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களுடைய கிராமங்களுக்கு வருகை தரும் கால்நடை மருத்துவ குழுவினருக்கு ஒத்துழைப்பு வழங்கி பசு மற்றும் எருமை இனங்களுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட்டு பாதுகாத்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியின் முடிவில் கலெக்டர், கால்நடைகளுக்கு நோய் எதிர்ப்பு மருந்தான தாது உப்பை பயனாளிகளுக்கு வழங்கினார்.

மேலும் செய்திகள்