கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் குளங்களின் கரைகள் உடையும் அபாயம்

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் குளங்களின் கரைகள் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Update: 2018-09-05 22:00 GMT
கம்பம்,


லோயர்கேம்ப் முதல் வீரபாண்டி வரையிலான கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முல்லைப்பெரியாறு தண்ணீரை நம்பி 14 ஆயிரத்து 707 ஏக்கரில் இருபோகமும், 5 ஆயிரத்து 190 ஏக்கர் பரப்பில் ஒரு போகமும் நெல் சாகுபடி நடந்து வருகிறது. இதற்காக வீரப்பநாயக்கன்குளம், உடைப்படிகுளம், ஒட்டுக்குளம் உள்ளிட்ட குளங்களில் முல்லைப்பெரியாற்றில் இருந்து வரும் தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த குளங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீரமைக்கப்பட்டன. குறிப்பாக குளங்களின் கரைகள் அகலப்படுத்தும் பணி நடந்தது. கரையின் மேல்பகுதியில் வாகனங்கள் சென்று வரும் வகையில் செம்மண் பரப்பப்பட்டன. அந்த சமயத்தில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்தது.

இதன்எதிரொலியாக குளங்களின் கரையில் செம்மண் பரப்பும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் தற்போது கரைகள் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இந்த கரைகள் வழியாக விளைநிலங்களுக்கு இடுபொருட்களை எடுத்து செல்லும் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

கால்நடைகளுக்கு தேவையான புல் கட்டுகளை வாகனங்களில் கொண்டு செல்வோரும் சிரமப்படுகின்றனர். வீரப்பநாயக்கன்குளத்தின் கரை வழியாக தான் கம்பத்தில் இருந்து நாராயணதேவன்பட்டி கிராம மக்கள் சென்று வருகிறார்கள். இதேநிலை தொடர்ந்து நீடித்தால் குளங்களின் கரைகள் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே விவசாயிகள், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு குளங்களின் கரையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

மேலும் செய்திகள்